Published : 23 Jan 2020 05:49 PM
Last Updated : 23 Jan 2020 05:49 PM

பின்வாங்காத தயாரிப்பாளர்கள்: தொடரும் பேச்சுவார்த்தை

சந்தானத்தின் 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளதைத் தவிர்க்க, தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு சந்தானத்தின் 'தில்லுக்கு துட்டு 2' மற்றும் 'ஏ1' ஆகிய படங்களுக்குக் கிடைத்த வரவேற்பால், அவரது அடுத்த படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதில், முதல் ஆளாக 18 ரீல்ஸ் நிறுவனம் தங்களது தயாரிப்பில் சந்தானம் நடித்து வரும் 'டகால்டி' படம் வெளியாகும் என அறிவித்தது. விஜய் ஆனந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரித்திகா சென், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

'டகால்டி' படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் தீவிரமாகத் தொடங்கப்பட்ட வேலையில், கெனன்யா பிலிம்ஸ் நிறுவனமும் தங்களுடைய தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள 'சர்வர் சுந்தரம்' படமும் ஜனவரி 31-ம் தேதி வெளியீடு என்று அறிவித்துள்ளது. பால்கி இயக்கியுள்ள இந்தப் படம் தயாராகி நீண்ட மாதங்கள் ஆகின்றன. ஆனால், தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பைனான்ஸ் சிக்கலால் வெளியீட்டுத் தேதி தள்ளி வைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது.

தற்போது இரண்டு படங்களையும் போட்டிப் போட்டுக் கொண்டு, விளம்பரப்படுத்தி வருகிறார்கள். ஒரே நாளில் ஒரு நடிகரின் இரண்டு படங்கள் வெளியாகாது என்று நம்பிக்கையுடன் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். ஏனென்றால், இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களையும் அழைத்து தயாரிப்பாளர் சங்கத்தின் குழு பேச்சுவார்த்தை நடத்தியது.

இதில் இரண்டு தயாரிப்பாளர்களுமே எங்களுக்கு இந்தத் தேதியை விட்டால், வேறு தேதி கிடைக்காது என்று தெரிவித்துவிட்டார்கள். இருவருமே அவர்களை ஒரு வாரம் தள்ளி வரச் சொல்லுங்கள் எனத் தெரிவித்துள்ளனர். ஆனால், இறுதி வரை நாங்கள் ஒரு வாரம் தள்ளி வருகிறோம் என்று யாரும் அறிவிக்கவில்லை.

பலமுறை அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டு வந்த படம் 'சர்வர் சுந்தரம்' என்பதால், விநியோகஸ்தர்களோ 'டகால்டி' படத்துக்கு முன்னுரிமை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x