Published : 21 Jan 2020 03:27 PM
Last Updated : 21 Jan 2020 03:27 PM

கருத்தில் உறுதியாக இருப்பதில் மகிழ்ச்சி; ரஜினியைப் பாராட்டுகிறேன்: குஷ்பு

ரஜினி தனது கருத்தில் உறுதியாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்காக அவரைப் பாராட்டுகிறேன் என்று குஷ்பு தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் துக்ளக் பத்திரிகை விழாவில் பேசிய பேச்சு சர்ச்சையானது. அதையொட்டி எழுந்த விவாதங்களுக்குப் பதிலளிக்காமல் இருந்த ரஜினி, இன்று காலை திடீரென பேட்டி அளித்தார். தான் சொன்ன கருத்து சரியானதுதான். அதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்று தெரிவித்தார். ரஜினியின் இந்தப் பேட்டியும் விவாதத்தைக் கிளப்பியது.

ரஜினியின் இந்தக் கருத்துக்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தற்போது ரஜினியின் இந்தப் பேச்சு குறித்து நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு தனது ட்விட்டர் பதிவில், "சரியோ தவறோ அது அவருடைய சொந்தக் கருத்து. ஆனால், ரஜினி சார் தனது கருத்தில் உறுதியாக இருப்பது மகிழ்ச்சி. நமக்கு இப்போது தேவை நேர்மை. பயந்தவர்களால் ஒன்றும் செய்ய இயலாது. உங்கள் இதயம் என்ன சொல்கிறதோ அதைப் பேசுங்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும்.

அனைவரையும் நம்மால் திருப்திப்படுத்த முடியாது. ரஜினி சார் கருத்து தவறென்றால் அதைப் பற்றிய உங்கள் அபிப்ராயத்தைத் தெரிவிப்பது உங்கள் ஜனநாயக உரிமை. அவருடைய உறுதியை நான் பாராட்டுகிறேன். அவர் கூறியது சரியா தவறா என்று என்னால் மதிப்பிட இயலாது. பயமின்றி தைரியமாகப் பேசுவதுதான் முக்கியம். அதை அவர் செய்துகொண்டிருக்கிறார். அடுத்தவரிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக ஒருவரால் யாருக்கும் பாதிப்பில்லாமல் பேச முடியாது” என்று தெரிவித்துள்ளார் குஷ்பு.

திமுக கூட்டணியில் உள்ள அனைவருமே ரஜினியின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சியில் தேசிய செய்தித் தொடர்பாளராக இருக்கும் குஷ்புவின் இந்தக் கருத்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கும் படத்தில் ரஜினியுடன் குஷ்பு நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x