Published : 20 Jan 2020 07:53 PM
Last Updated : 20 Jan 2020 07:53 PM

‘லவ் ஆஜ் கல்’ ஒரு திரைப்பட வரிசையாகலாம்: இயக்குநர் இம்தியாஸ் அலி

எதிர்காலத்தில் புதிதான கதைகள் கிடைத்தால் ‘லவ் ஆஜ் கல்’, தனி திரைப்பட வரிசையாக மாறும் என்று இயக்குநர் இம்தியாஸ் அலி கூறியுள்ளார்.

இம்தியாஸ் அலி இயக்கத்தில் ‘லவ் ஆஜ் கல்’ திரைப்படத்தில் சாரா, கார்த்திக் ஆர்யன் நடித்துள்ளனார். இந்தப் படத்தின் முதல் பாகத்தை 2009-ம் ஆண்டு சைஃப் அலி கான், தீபிகா படுகோன் நடிக்க, இம்தியாஸ் அலி இயக்கியிருந்தார். அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் என்று அறியப்பட்டாலும் இது அந்தப் படத்தின் தொடர்ச்சி அல்ல.

புதிய ‘லவ் ஆஜ் கல்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் சில நாட்களுக்கு முன் நடந்தது. இதில் படத்தின் நாயகன் கார்த்திக் ஆர்யன், நாயகி சாரா அலி கான், இயக்குநர் இம்தியாஸ் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

2009-ம் ஆண்டு வெளிவந்த படத்தின் தலைப்பையே இதற்கும் வைத்ததற்கான காரணம் குறித்துக் கேட்டபோது, "திரைப்பட வரிசையாக மாற்றக்கூடிய யோசனையாக நான் இதை நினைக்கிறேன். இரண்டு படங்களுக்கும் ஒரே தலைப்பு வைத்ததற்கான காரணம். பத்து வருடங்கள் கழித்து நான் முதலில் எடுத்த படத்திற்கான அடிப்படை மாறியிருக்கிறது. அதை புதிய வழியில் சொல்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

எதிர்காலத்தில் சில வருடங்கள் கழித்து, இந்த உறவுகளின் தன்மை மாறினால், எனக்குப் புதிதாகச் சொல்ல ஒரு விஷயம், ஒரு கதை கிடைத்தால், அதை நான் சொல்ல முயல்வேன். எனக்குக் காதல் பற்றித் தெரியாது. ஆனால் உலகம் இயங்க அதுதான் காரணம். தன்னைச் சுற்றியுள்ள உலகத்தைக் காதல் மாற்றிவிடும். இன்று இருக்கும் காதல் உறவின் தன்மை மாறியிருக்கிறது. விஷயங்கள் வேகமாக நகர்கின்றன. ஆனால் ஒரு ஆணும் பெண்ணும் இணைவதற்கான காரணம் மட்டும் மாறவே இல்லை" என்று இம்தியாஸ் அலி பேசியுள்ளார்.

‘லவ் ஆஜ் கல்’ திரைப்படம் பிப்ரவரி 14-ம் தேதி வெளியாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x