Published : 19 Jan 2020 07:52 PM
Last Updated : 19 Jan 2020 07:52 PM

என் படம் எப்போது வெளியானாலும் ஓடும் என்று ஓவர் நம்பிக்கை வைக்காதீர்கள்: எஸ்.வி.சேகர் வேண்டுகோள்

என் படம் எப்போது வெளியானாலும் ஓடும் என்று ஓவர் நம்பிக்கை வைக்காதீர்கள் என்று எஸ்.வி.சேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

'ஆடை' படத்துக்குப் பிறகு அமலா பால் நடிப்பில் அடுத்து வரவுள்ள படம் 'அதோ அந்த பறவை போல'. முழுக்க ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ஜோன்ஸ் தயாரித்துள்ளார். புதுமுக இயக்குநர் கே.ஆர்.வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தின் கதையை அருண் எழுதியுள்ளார். இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் படக்குழுவினருடன் எஸ்.வி.சேகர், இயக்குநர் திருமலை உள்ளிட்ட திரையுலகினருக்கும் கலந்து கொண்டார்கள். இந்தச் சந்திப்பில் பத்திரிகையாளர்கள் மத்தியில் எஸ்.வி.சேகர் பேசும் போது, "’அதோ அந்த பறவை போல’ பாட்டு வரி தான் இப்படத்தின் தலைப்பு. நம்மிடம் இப்படியான படங்கள் வருவதற்கு இப்போது தான் வாய்ப்பு வந்துள்ளது.

சினிமாவில் இரண்டு வகை. ஓடும் படம், ஓடாத படம் அவ்வளவு தான். சினிமாவில் ராமராஜன் பசுமாடு வைத்து பால் கறக்கும் படம் ஓடிவிட்டால் அதேபோல் பத்துப்படம் எடுப்பார்கள். ஏன் என்றால் இது வியாபாரம். நாங்கள் படம் எடுத்த காலத்தில் பத்து லட்சத்திலேயே படத்தை எடுத்து விடுவோம். நாம் சரியான பொருட்செலவில் படம் எடுக்க வேண்டும்.

இப்போது ஒரு நாளைக்குப் படப்பிடிப்பு செலவு நாற்பது லட்சம் ஆகிறது. சினிமாவில் மட்டும் தான் உள்ளே வந்து நிறைய விஷயங்கள் தெரிந்துகொள்ள வேண்டியதுள்ளது. முதலில் சினிமாவை தெரிந்து கொண்டு உள்ளே வரவேண்டும். இந்தப் படத்தில் பெரிய பிளஸ் அமலாபால். அவருக்கு எல்லா மொழிகளிலும் மார்க்கெட் இருக்கு. அமலாபாலின் தையரித்தை நான் பாராட்டுகிறேன்.

சினிமாவிற்கு சென்சார் தேவையே இல்லை என்பது என் கருத்து. நம்பிக்கை வேறு, ஓவர் நம்பிக்கை வேறு. சரியான நேரத்தில் படத்தை வெளியிடுங்கள். என் படம் எப்போது வெளியானாலும் ஓடும் என்று ஓவர் நம்பிக்கை வைக்காதீர்கள். அதனால், இப்படத்தை அப்படிச் சரியான நேரத்தில் வெளியீட்டு வெற்றி காண வாழ்த்துகிறேன்” என்று பேசினார் எஸ்.வி.சேகர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x