Published : 16 Jan 2020 06:01 PM
Last Updated : 16 Jan 2020 06:01 PM

லைகா நிறுவனத்தின் 2020-ம் ஆண்டுத் திட்டங்கள்: சுபாஷ்கரன் பேட்டி

லைகா நிறுவனத்தின் 2020-ம் ஆண்டு திட்டங்கள் குறித்து லைகா நிறுவனர் சுபாஷ்கரன் பேட்டியளித்துள்ளார்.

இலங்கையில் பிறந்த பிரிட்டிஷ் தமிழ் தொழிலதிபர் சுபாஷ்கரன் அல்லிராஜா. லண்டனில் மிகப்பெரிய மொபைல் சேவை நிறுவனத்தை நடத்தி வருகிறார். தமிழ் சினிமாவின் மீதிருக்கும் ஆர்வத்தில்தான் இவர் இங்கு பணத்தை முதலீடு செய்து வருகிறார். சிறுவயதில் ஒரு நாளைக்கு ஒன்றிரண்டு படங்கள் பார்த்துவிடுவாராம். தற்போது ‘இந்தியன் 2’, ‘பொன்னியின் செல்வன்’ போன்ற பிரம்மாண்டமான திரைப்படங்களைத் தயாரித்து வருகிறார்.

இலங்கையில் வடக்கு மாகாணத்தில் இருக்கும் முல்லைத்தீவில் பிறந்தவர் சுபாஷ்கரன். பதின்ம வயதில் இலங்கைப் போர் ஆரம்பித்த நேரத்தில், அதிலிருந்து வேறு தேசம் சென்றவர். பாரிஸில் 10 வருடம் அகதியாக வாழ்ந்த பின், லண்டனுக்குச் சென்று லைகா மொபைல் நிறுவனத்தைத் தொடங்கினார். தற்போது 22 நாடுகளில் 16 மில்லியன் பயனர்கள் இந்த மொபைல் சேவையைப் பயன்படுத்தி வருவதாக அந்நிறுவன இணையதளம் கூறுகிறது.

பிரிட்டனின் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு மிகப்பெரிய அளவில் நன்கொடை அளித்திருக்கிறது லைகா. பல வருடங்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் அந்நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை அந்நிறுவனம் மறுத்துள்ளது. "நான் ஒரு வியாபாரி. அந்தக் கட்சியை நான் ஆதரிக்கக் காரணம் அதன் நிதிக் கொள்கைதான். இதில் அரசியல் ரீதியிலான காரணம் எதுவுமில்லை" என்று கூறுகிறார் சுபாஷ்கரன்.

2017 ஆம் ஆண்டு, ஜாஃப்னாவில் அல்லிராஜா ஞானம் அறக்கட்டளை சார்பாக நடந்த வீடு வழங்கும் நிகழ்வுக்கு ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் தமிழக அரசியல்வாதிகளின் எதிர்ப்பினால் தனது பயணத்தை ரஜினிகாந்த் ரத்து செய்தார்.

இது குறித்துப் பேசிய சுபாஷ்கரன், "இலங்கையிலும் கூட தென்னக ஊடகங்கள், விடுதலைப்புலிகளின் கூட்டாளி என என்னைக் குற்றம் சாட்டுகிறார்கள். சில தமிழ் ஊடகங்கள், நான் ராஜபக்சேக்களிடம் நெருக்கம் காட்டுவதாகச் சொல்கிறார்கள். நான் யார் என நானே யோசிக்கிறேன்" என்கிறார்.

திரைப்படங்களைப் பொறுத்தவரை, "எப்போதுமே சூப்பர் ஸ்டார், பெரிய இயக்குநர் என்றில்லை. எனது ஆர்வம் நல்ல சினிமாவில் தான் இருக்கிறது. ‘காலா’, ‘வடசென்னை’ போன்ற படங்களை விநியோகித்ததில் எந்த முரணும் இல்லை. பல்வேறு வகையான சினிமாக்களை ஆதரிக்க வேண்டும் என்பது வணிகத்துக்குத் தேவையாய் இருந்தது. அது எங்களுக்குப் பலனளித்துள்ளது. மேலும் இந்த வருடம் குறைந்தது 10 சின்ன பட்ஜெட் படங்களைத் தயாரிக்கவுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார் சுபாஷ்கரன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x