Published : 13 Jan 2020 08:10 PM
Last Updated : 13 Jan 2020 08:10 PM

பாலு மகேந்திராவின் பதில், சகோதரர் வெற்றிமாறன், அம்மாவின் பேச்சு: 'அசுரன்' வெற்றி விழாவில் தனுஷ் நெகிழ்ச்சி

'அசுரன்' படத்தின் வெற்றி விழாவில் தனக்கும் வெற்றிமாறனுக்கும் இடையே இருக்கும் நட்பு குறித்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் தனுஷ்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பிரகாஷ் ராஜ், பசுபதி, கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அசுரன்'. பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படம் 100 நாட்களைக் கடந்துள்ளது. இதனால், 100 நாட்கள் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் படக்குழுவினருடன் விநியோகஸ்தர்களும் கலந்து கொண்டார்கள். அனைவருக்கும் 100-வது நாள் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது. விழாவில் பேசிய அனைவரும் இயக்குநர் வெற்றிமாறனுக்கும், தனுஷுக்கும் நன்றி தெரிவித்தார்கள்.

இறுதியாக தனுஷ் பேசியதாவது:

"இது மறக்க முடியாத நிகழ்ச்சி. நன்றி சொல்கின்ற மேடை. இந்தப் படத்தைத் தயாரித்த தாணு சாருக்கு என் நன்றி. எனக்கும், வெற்றிமாறனுக்கும் அவர் கொடுத்த சுதந்திரம்தான் 'அசுரன்' உருவெடுத்ததற்குக் காரணம். எனக்கு சின்னச்சின்ன இக்கட்டான சூழ்நிலைகள் வரும்போது, தாணு சார் உதவி செய்திருக்கிறார். அதை மறக்கவே மாட்டேன். அதற்கும் நன்றி.

இந்தப் படத்தின் இசைக்கும், அதைத் தாண்டிய பின்னணி இசைக்கும் ஜி.வி.பிரகாஷுக்கு எனது நன்றி. 'வா அசுரா வா' என்ற பாடலுக்காக இந்தப் படத்தின் 25% வெற்றியை அப்படியே ஒதுக்கி வைக்கலாம் என நினைக்கிறேன். இந்தப் படத்தின் முதல் பிரதி தயாராகும் போது லண்டனில் இருந்தேன். இந்தப் படம் என்னவாக வந்துள்ளது என்பதைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. முதல் ஃப்ரேமிலேயே 'வா அசுரா வா' என்ற இசை வரும்போது, ஜிவ்வென்று இருந்தது.

பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் ரொம்பவே கஷ்டப்படுத்திட்டேன் என்றார். திரையில் அப்படிப்பட்ட காட்சிகள் வரும்போது, இப்படி கஷ்டப்படுவது ஆனந்தமாகத்தான் இருக்கும். அவரோடு பணிபுரியும்போது ஹாலிவுட் படங்களுக்கு நிகரான காட்சிகள் வரும் எனத் தெரியும். கடைசியில்தான் அவரைத் தொடர்பு கொண்டோம். உடனே ஒப்புக் கொண்டு பண்ணிக் கொடுத்தார். வேல்ராஜ் உழைப்பு ரொம்பவே நன்றி. என்னுடன் இணைந்து நடித்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.

தமிழ் சினிமா நல்லபடியாகப் போய்க் கொண்டிருப்பதற்குக் காரணமாக நிறைய பேர் இந்த மேடையில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி.

'அது ஒரு கனாக்காலம்' படத்தின் படப்பிடிப்பில் அம்மாவை நினைத்து எழுந்து கதறி அழுதுவது மாதிரி ஒரு காட்சி எடுத்தார்கள். அந்தப் படத்தில் நடிக்கும்போது 20 வயதுதான் என்பதால், எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனத் தெரியாது. அப்போது பாலு மகேந்திரா சாரிடம் 'வெற்றி சாரை ஒரு முறை பண்ணச் சொல்லுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்' என்றேன்.

பொதுவாகவே ஒரு காட்சியை உதவி இயக்குநரை நடித்துக் காட்டச் சொன்னால் உடனே அதிர்ச்சியாவார்கள். அதை ஒரு விளையாட்டாகப் பண்ண வேண்டும் என்றுதான் பண்ணினேன். ஆனால் வெற்றிமாறன் உடனே கையிலிருந்த பேடை போட்டுவிட்டு, உடனே என் இடத்தில் போய் உட்கார்ந்தார். இவர் சரியாக பண்ணிவிட்டால் என்ன செய்வது என்று யோசித்தேன். படுத்து, எழுந்து, அழுது நடித்துக் கொண்டே இருக்கிறார். அப்போது தான் நான் சும்மா இருந்திருக்க வேண்டும், தப்பு பண்ணிட்டோம் என நினைத்தேன். பின்பு அவரை மாதிரி நடிக்காமல், நான் வேறு மாதிரி நடித்தேன்.

ரொம்ப நேரம் கழித்து பாலு மகேந்திரா சார் என்னை அழைத்தார். 'என்ன யோசிக்கிற' என்று கேட்டார். 'உங்களுக்கு நான் நடித்தது பிடித்ததா, வெற்றி நடித்தது பிடித்ததா? இரண்டுக்குமே ஒரு மாதிரியே தான் இருந்தீர்கள்' எனக் கேட்டேன். அவர் அளவுக்கு நான் பண்ணிட்டேனா என்று சந்தேகமாக இருக்கிறது என்று சொன்னேன். சிரித்துக் கொண்டே 'பிள்ளைகளில் எது சிறந்தது என்று கேட்கிறாய். இது பதிலளிக்க முடியாது' என்று போய்விட்டார்.

அன்று எங்கள் இருவரையும் சகோதரர்களாகத்தான் பார்த்தார் பாலு மகேந்திரா சார். அன்று முதலே இன்று வரை சகோதரர்களாகத் தான் வலம் வந்து கொண்டிருக்கிறோம். வெற்றிக்குத் தனியாக நன்றி சொல்ல வேண்டுமா எனத் தெரியவில்லை. சிவசாமி என்ற வயதுக்கு மீறிய கதாபாத்திரம் நடிப்பதற்குத் தைரியம் வேண்டும் என்கிறார்கள். அதைத் தாண்டி, நான் இதைச் செய்வேன் என்று நம்பிக்கை வைத்த வெற்றிக்கு நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும்.

நிறைய கதைகள் பேசி ஒன்றை முடிவு செய்வோம். ஆனால், இந்தக் கதையைச் சொல்லி தலைப்பைச் சொன்னவுடன் 'பண்றோம்' என்று மட்டும்தான் சொன்னேன். இந்தப் படம் வெளியாகும் போது நான் ஊரில் இல்லை, லண்டனில் இருந்தேன். கஷ்டப்பட்டு வேலை செய்திருந்தோம். படம் எப்படிப் போகிறது என்ற செய்தி என் காதுக்கு வரவே இல்லை. அதனால் பதற்றமாகவே இருந்தேன். அம்மா போன் செய்து 'பெரிய வெற்றின்னு சொல்றாங்கப்பா. இப்படியொரு வெற்றி கிடைக்கும்போது நீ தூரமாக இருக்கிறது தான்பா வருத்தமா இருக்கு' என்று சொன்னார். அப்போது 'வெற்றி எனக்குத் தூரமாக இல்லை. பக்கத்திலேயேதான் இருக்கு' என்று வெற்றிமாறனைச் சொன்னேன்.

தோல்வியை மட்டும்தான் கிட்டப்போய் தழுவிப் பார்க்கணும். வெற்றியை கிட்டப்போய் பார்த்தால் அது நம்மை சுழட்டிவிடும். கடவுளுக்கு நம்மை எப்போது எங்கு வைக்கவேண்டும் எனத் தெரியும். அதனால் தான் இப்படியொரு வெற்றி கிடைக்கும்போது கடவுள் தூரமாகக் கொண்டு போய் வைத்துவிட்டார்.

இந்தப் படத்துக்காக லண்டனில் மாரி செல்வராஜ் என்கூடவே இருந்து டப்பிங் பண்ணிக் கொடுத்தார். ஏனென்றால், அவருக்கு அந்த வட்டார மொழி நன்றாகத் தெரியும். இந்தப் படத்துக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை என்றாலும், அதைப் பண்ணிக் கொடுத்தார். அவருக்கும் நன்றி".

இவ்வாறு தனுஷ் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x