Published : 08 Jan 2020 06:04 PM
Last Updated : 08 Jan 2020 06:04 PM

வைரலான வீடியோ: மாற்றுத் திறனாளி தம்பதியரைச் சந்தித்து நெகிழ்ந்த விஜய்

மாற்றுத்திறனாளி தம்பதியரின் வைரலான பேச்சால், இருவரையும் சந்தித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார் விஜய்.

2020-ம் ஆண்டுக்கான ஜீ தமிழ் விருதுகள் வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு முன்பாக முன்னணி நடிகர்களின் ரசிகர்களை வைத்து ஒரு கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள் தம்பதியான குமார் - கீதா இருவரும் கலந்து கொண்டனர்.

இதில் குமார் பேசும் போது, "அண்ணா.. உங்களைப் பார்க்க வேண்டும் என 20 ஆண்டுகளாகப் பல முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறேன். அனைத்திலுமே எனக்குத் தோல்விகள்தான் வந்துள்ளது. நான் சாகிறதுக்குள்ள ஒரே ஒரு முறை உங்களைப் பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் அண்ணா. நீங்கள் நல்லாயிருக்கணும், 100 ஆண்டுகள் நல்லாயிருக்கணும். 1000 வருஷம் நல்லாயிருக்கணும்.

அண்ணி, குழந்தைகளுடன் சந்தோஷமா இருக்கணும். எங்களுக்கு நிறைய படம் கொடுக்கணும். நிறைய பெயர், புகழ் எல்லாம் சம்பாதிக்கணும். அதாவது உங்களுக்கு முன்பாகவே நாங்கள் இருவரும் செத்துப் போய்விட வேண்டும். நீங்கள் இல்லாத ஒரு உலகத்தை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை" என்று பேசினார்.

இந்த வீடியோ விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பலருமே இவர்களை விஜய் சந்திக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

கண்டிப்பாக சந்திப்பார் என்று விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், எப்போது என்பது தெரியாமல் இருந்தது. இந்நிலையில், இருவரையும் 'மாஸ்டர்' படப்பிடிப்புத் தளத்தில் சந்தித்துப் பேசினார் விஜய். 20 ஆண்டுகளாக என்னைச் சந்திக்க முயற்சி செய்திருக்கிறீர்கள். உங்களை நான் பார்க்கவில்லை என்பது எனக்கே அசிங்கமாக இருப்பதாக விஜய் அந்தத் தம்பதியினரிடம் தெரிவித்தார்.

மேலும், நீங்கள் இல்லாத உலகத்தை நினைத்துப் பார்க்க முடியவில்லை என்ற வார்த்தைகள் எல்லாம் என்னை ரொம்பவே நெகிழ வைத்துவிட்டது என விஜய் கூறினார். உங்களுடன் நடிக்க வேண்டும் என்று குமார் கேட்க, கண்டிப்பாகப் பண்ணலாம் என்று கூறியுள்ளார் விஜய்.

தற்போது விஜய்யைச் சந்தித்த பின்பு, இந்த மாற்றுத்திறனாளி தம்பதியினர் அளித்த பேட்டிதான் இணையதளத்தில் ட்ரெண்டிங்காக இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x