Published : 31 Dec 2019 08:15 PM
Last Updated : 31 Dec 2019 08:15 PM
'துப்பாக்கி' 2-ம் பாகத்தின் களம் எப்படியிருக்கும் என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், சத்யன், ஜெயராம், வித்யூத் ஜாம்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'துப்பாக்கி'. 2012-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில்தான் முதன் முதலில் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணைந்தது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.
'துப்பாக்கி' படத்தைத் தொடர்ந்து 'கத்தி' மற்றும் 'சர்கார்' ஆகிய படங்களில் இந்தக் கூட்டணி இணைந்து பணிபுரிந்துள்ளது. ஆனால், ரசிகர்கள் பலருமே இந்தக் கூட்டணி இணைந்து 'துப்பாக்கி 2' பண்ணுமா என்ற ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். அவ்வப்போது 'துப்பாக்கி 2' குறித்த கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்
தற்போது 'தர்பார்' படத்தை விளம்பரப்படுத்த அளித்துள்ள பேட்டியில் 'துப்பாக்கி 2' குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் கூறுகையில், "இரண்டாம் பாகம் உருவாக்கினால் கண்டிப்பாக முதல் பாகத்துடன் ஒப்பிடுவார்கள். 'துப்பாக்கி 2' மட்டும் கண்டிப்பாகப் பண்ண வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.
அந்தக் கதைக்கான பொறி தோன்றும்போது, கண்டிப்பாக மும்பை களத்தில் வித்தியாசமாக இருக்கலாம். அல்லது ஜெகதீஷ் கதாபாத்திரம் வேறு ஒரு களத்துக்காக வெளிநாடு போனால் எப்படியிருக்கும் என வித்தியாசமான பொறி தோன்றினால் கண்டிப்பாக 'துப்பாக்கி 2' நடக்கும்" என்று தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT