Published : 30 Dec 2019 05:07 PM
Last Updated : 30 Dec 2019 05:07 PM

தர்பார் படத்திற்கு தடை கோரிய வழக்கு: லைகா நிறுவனம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

நடிகர் ரஜினிகாந்த் நடித்து பொங்கலுக்கு வெளியாகவுள்ள 'தர்பார்' படத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கில் லைகா நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகை நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், லைகா நிறுவனம் தயாரித்துள்ள 'தர்பார்' திரைப்படம் வரும் ஜனவரி மாதம் 9-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் இந்த படத்திற்கு தடை விதிக்க கோரி மலேசியாவை சேர்ந்த டி.எம்.ஒய். கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நடிகர் ரஜினிகாந்த நடித்த '2.0' படத்தை தயாரித்த லைகா நிறுவனத்திடம் இருந்து, மலேசிய விநியோக உரிமையை 20 கோடி ரூபாய்க்கு பெற்றதாக தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் படத்தயாரிப்புக்கு 12 கோடி ரூபாயை ஆண்டுக்கு 30 சதவீத வட்டிக்கு கடனாக லைகா நிறுவனத்திற்கு வழங்கியதாகவும், அந்த தொகை தற்போது வட்டியுடன் சேர்த்து 23 கோடியே 70 லட்சம் ரூபாயை தங்களுக்கு லைகா நிறுவனம் வழங்க வேண்டி இருப்பதால், அந்த தொகையை வழங்காமல் 'தர்பார்' படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை இன்று (டிச.30) விசாரித்த நீதிபதி கோவிந்தராஜ், ஜனவரி 2-ம் தேதிக்குள் மனுவுக்கு பதிலளிக்க லைகா நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x