Published : 30 Dec 2019 10:41 AM
Last Updated : 30 Dec 2019 10:41 AM

கைவிடப்பட்டதா சிவகார்த்திகேயன் - விக்னேஷ் சிவன் படம்?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருந்த படம் கைவிடப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் 'ஹீரோ'. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தைத் தொடர்ந்து, தற்போது 'டாக்டர்' படத்தில் சிவகார்த்திகேயன் கவனம் செலுத்தி வருகிறார்.

நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ப்ரியா அருள் மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயனுடன் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் சிவகார்த்திகேயனே தயாரித்து வருகிறார்.

முன்னதாக, 'ஹீரோ' படத்துக்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவிருந்த படத்துக்குத் தேதிகள் ஒதுக்கவிருந்தார் சிவகார்த்திகேயன். இன்னும் 20 ஆண்டுகள் கழித்து காதல் எப்படியிருக்கும் என்பதை வைத்து காமெடி கலந்த கதையொன்றைத் தயார் செய்து வைத்திருந்தார் விக்னேஷ் சிவன். அக்கதையைத் தயாரிக்க லைகா நிறுவனமும் முன்வந்தது.

ஆனால், படத்தின் பொருட்செலவைக் கணக்கில் கொண்டு அதன் தயாரிப்பிலிருந்து லைகா பின்வாங்கியது. இந்நிலையில், அதே கதையை வைத்து பல்வேறு தயாரிப்பாளர்களிடம் பேசினார் விக்னேஷ் சிவன். அனைவருமே தயாரிப்புச் செலவைக் காரணம் காட்டி தயங்கிய நிலையில், அந்தக் கதையை அப்படியே ஒதுக்கி வைத்துவிட்டார் விக்னேஷ் சிவன்.

தற்போது சிவகார்த்திகேயனுக்காக வேறொரு கதையைக் குறைந்த பொருட்செலவில் பண்ணுவது போல் விக்னேஷ் சிவன் எழுதி வருகிறார். இந்தக் கதையை எழுதி முடிக்க நேரமெடுக்கும் என்பதால் தான், 'டாக்டர்' படத்தைத் தொடங்கிவிட்டார் சிவகார்த்திகேயன். இந்தப் படம் முடிவதற்குள், விக்னேஷ் சிவன் கதையை எழுதி முடித்து, அது சிவகார்த்திகேயனுக்குப் பிடித்து தயாரிப்பாளர் அமைந்தால் மட்டுமே இந்தக் கூட்டணி இணைய வாய்ப்பு உண்டு என்கிறார்கள் திரையுலகில்.

நயன்தாரா நடித்து வரும் 'நெற்றிக்கண்' படத்தைத் தயாரித்துக் கொண்டே, தன் அடுத்த இயக்கத்துக்கான கதையை எழுதி வருகிறார் விக்னேஷ் சிவன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x