Published : 28 Dec 2019 11:01 AM
Last Updated : 28 Dec 2019 11:01 AM

'தர்பார்' vs ’பட்டாஸ்': ரஜினி அறிவுறுத்தல்

பொங்கலுக்கு, தன் படத்துடன், தனுஷ் படமும் வெளியாகவுள்ளதால், சிக்கல் இல்லாத வண்ணம் பார்த்துக் கொள்ளுமாறு ரஜினி அறிவுறுத்தியுள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'தர்பார்'. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் ட்ரெய்லருக்கு, இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

'தர்பார்' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து, ஜனவரி 9-ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதனிடையே, கடந்த ஆண்டு பொங்கல் சென்டிமெண்ட்டை இந்த ஆண்டும் தொடரவுள்ளது சத்யஜோதி நிறுவனம். தங்களுடைய தயாரிப்பில் தனுஷ், சிநேகா, மெஹ்ரீன், நவீன் சந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'பட்டாஸ்' படத்தை, ஜனவரி 16-ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.

துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஒரு வார இடைவெளியில்தான் இரண்டு படங்களுமே வெளிவருகின்றன. ஆனால், தன் மருமகன் படம் என்பதால், தியேட்டர், விநியோகம் உள்ளிட்ட விஷயங்களில் இரண்டு படங்களுக்கும் எவ்விதச் சிக்கலும் இல்லாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என ரஜினி அறிவுறுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனால், இரண்டு படக்குழுவினருமே திரையரங்குகள் ஒப்பந்தம் உள்ளிட்ட விஷயங்களில் தெளிவாக உள்ளனர். மேலும், தற்போது நடித்துவரும் சிவா படத்தைத் தொடர்ந்து, தனுஷ் - தாணு இணைந்து தயாரிக்கவுள்ள படத்துக்கு ரஜினி தேதிகள் ஒதுக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x