Published : 28 Dec 2019 09:59 AM
Last Updated : 28 Dec 2019 09:59 AM

'சப்பாக்' - 'உயரே' ஒப்பீடு: தீபிகா படுகோன் கருத்து

தனது 'சப்பாக்' படத்தை பார்வதி நடிப்பில் மலையாளத்தில் வெளியான 'உயரே' படத்துடன் ஒப்பிடுவது குறித்து நடிகை தீபிகா படுகோன் கருத்து தெரிவித்துள்ளார்.

மேக்னா குல்சார் இயக்கத்தில் தீபிகா படுகோன் நடித்துள்ள படம் 'சப்பாக்'. இது லக்‌ஷ்மி அகர்வால் என்ற, ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த பெண்ணின் உண்மைக் கதையை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் திரைப்படம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்த நாளிலிருந்தே படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வருகிறது. சமீபத்தில் வெளியான ட்ரெய்லரும் பாராட்டைப் பெற்றுள்ளது. இதுதான் தன் வாழ்க்கையிலேயே மிகக் கடினமான படம் என்று தீபிகா குறிப்பிட்டிருந்தார். இந்தப் படத்தை தீபிகா இணைந்து தயாரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் மாதம் பார்வதி நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற 'உயரே' திரைப்படமும் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு மீண்டு வரும் ஒரு பெண்ணைப் பற்றிய நம்பிக்கைக் கதையே. 'சப்பாக்' திரைப்படத்திற்கும், 'உயரே' திரைப்படத்திற்கும் இடையே சமூக வலைதளங்களில் ஒப்பீடு செய்து வருவதைப் பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் தீபிகாவிடம் கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்துள்ள தீபிகா, "ஒவ்வொருவருக்கும் அதைச் சொல்ல வித்தியாசமான வழி இருக்கிறது. இன்று யார் வேண்டுமானாலும் லக்‌ஷ்மி குறித்தும் ஆசிட் வன்முறை குறித்தும் படம் எடுக்க முடிவு செய்யலாம். ஆனால் ஒவ்வொரு படத்திக்கும் ஒவ்வொரு பாணி இருக்கும் என நினைக்கிறேன். அது நல்ல விஷயம் என்று நான் நினைக்கிறேன். சினிமா ஒரு வலிமையான ஊட்கம். அதனால்தான் நாங்கள் (இங்கு) இந்தக் கதைகளை சொல்ல விரும்புகிறோம்.

ஆசிட் வன்முறை நம் நாட்டில் இல்லவே இல்லை என்று சொல்ல முடியாது. நடந்திருக்கிறது. பாலியல் வன்முறை போன்ற மற்ற பிரச்சினைகளைப் போல இதுவும் நிறைய பேசப்பட்டிருக்கிறது. கடந்த வருடம் ஷபானா அவர்களும் இது பற்றிய படம் எடுத்தது நல்லதுதான். இன்னும் சில படங்களும் உள்ளன. எனவே (இந்த ஒப்பீடு குறித்து) எந்தக் கவலையும் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

'சப்பாக்' ஜனவரி 10, 2020ல் வெளியாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x