Published : 28 Dec 2019 12:02 PM
Last Updated : 28 Dec 2019 12:02 PM

'மாநாடு' அப்டேட்: சிம்புவுக்கு வில்லனாக சுதீப்?

'மாநாடு' படத்தில் சிம்புவுக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக வெளியான செய்தி தவறானது என்று சுதீப் தெரிவித்துள்ளார்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படம் 'மாநாடு'. இதன் படப்பிடிப்பு ஜனவரி 20-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. நீண்ட நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. பாரதிராஜா, எஸ்.ஏ.சி, கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்ட பலர் இதில் சிம்புவுடன் நடிக்கவுள்ளனர்.

யுவன் இசையமைப்பாளராகவும், ஏகாம்பரம் ஒளிப்பதிவாளராகவும் பணிபுரியவுள்ளனர். தற்போது இந்தப் படத்தின் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்ற ஆலோசனையில் இறங்கியுள்ளது படக்குழு. அதில் சுதீப், அரவிந்த்சாமி உள்ளிட்ட பல பெயர்கள் பரிசீலனையில் இருந்துள்ளது.

அதற்குள், சிம்புவுக்கு வில்லனாக சுதீப் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகிவிட்டன. இதை பலரும் பகிர்ந்து வந்தனர். ஆனால், இந்தச் செய்தியைக் குறிப்பிட்டு சுதீப் தனது ட்விட்டர் பதிவில், ‘தவறான செய்தி’ என்று தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், படக்குழுவினர் இன்னும் சுதீப்பை அணுகி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

ஜனவரி 20-ம் தேதி படப்பிடிப்பைத் தொடங்கி, ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடிக்கப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x