Published : 25 Dec 2019 03:41 PM
Last Updated : 25 Dec 2019 03:41 PM

ரஜினியை இயக்கும் வாய்ப்பை நழுவ விட்ட ப்ரித்விராஜ்

ரஜினி படம் இயக்க கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டுள்ளார் நடிகரும் இயக்குநருமான ப்ரித்விராஜ்

மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான ப்ரித்விராஜ், இயக்குநராக அறிமுகமான படம் 'லூசிஃபர்'. மோகன்லால், மஞ்சு வாரியர், விவேக் ஓபராய், டோவினோ தாமஸ், இந்திரஜித் உள்ளிட்ட பலரும் நடித்த இந்தப் படம் மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியது. இந்தாண்டு மார்ச் 28-ம் தேதி வெளியான இந்தப் படமே மலையாளத்தில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையையும் பெற்றுள்ளது.

இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, 'லூசிஃபர்' படத்தின் 2-ம் பாகமான 'எம்புரான்' படத்தில் மீண்டும் மோகன்லால் - ப்ரித்விராஜ் கூட்டணி இணையவுள்ளது. இதன் படப்பிடிப்பு அடுத்தாண்டு துவங்கவுள்ளது.

இதனிடையே, ப்ரித்விராஜ் நடித்துள்ள 'ட்ரைவிங் லைசன்ஸ்' படம் வெளியாகி விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஒன்றில் தனக்கு ரஜினி படத்தை இயக்க வந்த வாய்ப்பு கைநழுவிவிட்டது என்று தெரிவித்துள்ளார் ப்ரித்விராஜ்.

இது தொடர்பாக ப்ரித்விராஜ், "'லூசிஃபர்' படத்தை முடிக்கும் தருவாயில் எனக்கு நடிகர் ரஜினிகாந்த்தின் படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் 'ஆடுஜீவிதம்' படத்தில் நான் ஏற்கெனவே ஒப்பந்தம் ஆகியிருந்ததால் என்னால் அதை இயக்க முடியவில்லை. பின் ரஜினி அவர்களுக்கு மன்னிப்பு கேட்டு ஒரு நீண்ட கடிதத்தை எழுதி அனுப்பினேன். என் வாழ்வில் யாரிடமும் நான் இப்படி மன்னிப்பு கேட்டதில்லை. அந்த வாய்ப்பை தவறவிட்டதில் வருத்தம்" என்று தெரிவித்துள்ளார் ப்ரித்விராஜ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x