Published : 24 Dec 2019 04:10 PM
Last Updated : 24 Dec 2019 04:10 PM

பார்த்திபன் - வடிவேலு திடீர் சந்திப்பு; பின்னணி என்ன?

பார்த்திபன் - வடிவேலு சந்தித்ததன் பின்னணி என்ன என்பதற்கான தகவல் வெளியாகியுள்ளது.

பார்த்திபன் - வடிவேலு கூட்டணியில் உருவான காமெடி காட்சிகள் அனைத்துமே மிகவும் பிரபலம். 'பாரதி கண்ணம்மா', 'வெற்றிக்கொடி கட்டு', 'நினைக்காத நாளில்லை', 'காதல் கிறுக்கன்', 'காக்கை சிறகினிலே' உள்ளிட்ட பல படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். பார்த்திபன் அளித்த பல பேட்டிகளில், வடிவேலுவை மிகவும் பாராட்டியிருந்தார்.

நீண்ட நாட்களாகவே திரையுலகிலிருந்து விலகியே இருக்கிறார் வடிவேலு. அவருடைய நடிப்பில் அடுத்த படம் எப்போது என்ற பலரும் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.

இந்நிலையில் வடிவேலுவைச் சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை, தனது ட்விட்டர் தளத்தில் பார்த்திபன் வெளியிட்டார். அந்தப் புகைப்படம் தொடர்பாக "இன்றைய சந்திப்பு... நாளைய செய்தியாகலாம்!" என்றும் தெரிவித்துள்ளார் பார்த்திபன்.

இருவரின் சந்திப்பையும், பார்த்திபனின் கருத்தையும் வைத்து இருவரும் படம் பண்ணவுள்ளார்கள் எனப் பலரும் செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். தற்போது இயக்குநர் சேரன் 'பாரதி கண்ணம்மா 2' திரைக்கதையை எழுதி வருகிறார் என்றும், அதில்தான் பார்த்திபனும் வடிவேலுவும் நடிக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டனர்.

இது தொடர்பாக விசாரித்த போது, "உண்மையில் இருவரும் தனியார் தொலைக்காட்சியின் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டபோது, திடீரென சந்தித்துக் கொண்டார்கள். இந்தச் சந்திப்பை இருவருமே எதிர்பார்க்கவே இல்லை. தங்களுடைய படங்கள், காமெடி என மீண்டும் நட்பைப் புதுப்பித்துக் கொண்டது உண்மைதான்.

அப்போது இருவரும் படம் பண்ணுவது குறித்துப் பேச்சு வந்தபோது, 'அதுக்கென்னா பண்ணிட்டாப் போச்சு' என்று சிரித்துக் கொண்டே சொன்னார் வடிவேலு. ஆனால் என்ன படம், யார் இயக்குநர் என்பது எதுவுமே இன்னும் முடிவாகவில்லை. அதற்குள் 'பாரதி கண்ணம்மா 2' என்றெல்லாம் செய்தி வெளியானது எப்படி என்றே தெரியவில்லை" என்று குறிப்பிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x