Published : 24 Dec 2019 03:10 PM
Last Updated : 24 Dec 2019 03:10 PM

பேருந்துகளை எரிக்க யார் அதிகாரம் அளித்தார்கள்? - கங்கணா ரணாவத் கேள்வி

பேருந்துகளை எரிக்க யார் அதிகாரம் அளித்தார்கள் என்று குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக நடந்த வன்முறை குறித்து பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் கேள்வி எழுப்பியுள்ளார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியப் பல்கலைக்கழக மாணவ, மாணவியர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த 15-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. அரசு பஸ்கள், போலீஸ் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து ஜாமியா பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்த போலீஸார் தடியடி நடத்தி, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். இந்தச் சம்பவம் தொடர்பாக பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் ட்விட்டர் வாயிலாக மாணவர்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

இந்நிலையில் மாணவர்களின் போராட்டத்தை கங்கணா ரணாவத் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் கங்கணா கூறும்போது, “மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடும்போது அதனை வன்முறையாக மாற்றாமல் இருப்பது முதலில் முக்கியமானது. நமது மக்கள் தொகையில் 4% மட்டுமே வரி செலுத்துபவர்கள் இருக்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் அவர்களைத்தான் நம்பி இருக்கிறார்கள். அவ்வாறு இருக்கையில் பேருந்துகளை எரிக்கவும், கலவரத்தை ஏற்படுத்தவும் யார் உங்களுக்கு அதிகாரம் அளித்தார்கள்? " என்று கேள்வி எழுப்பினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x