Published : 20 Dec 2019 04:49 PM
Last Updated : 20 Dec 2019 04:49 PM

’ஊட்டி வரை உறவு’ - ‘இருமலர்கள்’; ‘பிராப்தம் - சுமதி என் சுந்தரி’; ’எங்கிருந்தோ வந்தாள்’ - ‘சொர்க்கம்’ - ஒரேநாளில் ரிலீசான சிவாஜி படங்கள்

வி.ராம்ஜி


கமல், ரஜினி, மோகன், விஜயகாந்த் தொடங்கி பலரின் திரைப்படங்கள் ஒன்றுக்கு மேற்பட்டு இரண்டு படங்களாக ஒரே நாளில் வெளியாகி இருக்கின்றன. ஆனால், அதிக அளவில் அடுத்தடுத்த வருடங்களில், ஒரேநாளில் ரிலீசானது சிவாஜி படங்கள் மட்டும்தான்!


1952-ம் ஆண்டு ‘பராசக்தி’ படத்தில் அறிமுகமான சிவாஜி, 1964-ம் ஆண்டு, தன்னுடைய நூறாவது படத்தை அடைந்தார். 100-வது படமான ‘நவராத்திரி’யுடன் ‘முரடன் முத்து’ திரைப்படமும் வெளியானது.


இதையடுத்து 67-ம் ஆண்டு, நவம்பர் 1-ம் தேதியன்று, சிவாஜிகணேசனின் இரண்டு படங்கள் வெளிவந்தன. ஸ்ரீதர் இயக்கத்தில், சிவாஜி, கே.ஆர்.விஜயா, முத்துராமன், எல்.விஜயலட்சுமி, நாகேஷ், சச்சு, டி.எஸ்.பாலையா முதலானோர் நடித்த ‘ஊட்டி வரை உறவு’ திரைப்படம் வெளியானது. வண்ணப்படமாக வந்த இந்தப் படம், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.


இதேநாளில், ‘ஊட்டி வரை உறவு’ படம் ரிலீசான நாளிலேயே, ‘இருமலர்கள்’ படமும் வெளியானது. சிவாஜி, பத்மினி, கே.ஆர்.விஜயா ஆகியோர் நடித்திருந்தனர். ஏ.சி.திருலோகசந்தர் இயக்கிய இந்தப் படம், கருப்புவெள்ளைப் படம். பாடல்கள் அனைத்தும் இதிலும் ஹிட்டாகியிருந்தன. ‘ஊட்டி வரை உறவு’ போலவே, இதிலும் கே.ஆர்.விஜயா சூப்பர் ஜோடி எனப் பெயரெடுத்தது. இரண்டு படங்களுமே வெற்றி பெற்றன.


பின்னர், 1971 -ம் ஆண்டு, ஏப்ரல் 14-ம் தேதி, சிவாஜிகணேசன் நடித்த ‘பிராப்தம்’ படமும் ‘சுமதி என் சுந்தரி’ படமும் வெளியாகின. ‘ஊட்டிவரை உறவு’ படத்தை எடுத்த ஸ்ரீதரின் சிஷ்யர் சிவி.ராஜேந்திரன் இயக்கத்தில், சிவாஜி, ஜெயலலிதா, நாகேஷ், வி.கோபாலகிருஷ்ணன் முதலானோர் நடித்திருந்தனர். குருவின் படத்தைப் போலவே சிஷ்யரும் வண்ணப்படமாக எடுத்திருந்தார். வெற்றியைத் தந்தார்கள் சுமதியும் சுந்தரியும்! இரண்டு படங்களுமே குளுகுளு மலைப்பிரதேசத்தில் எடுக்கப்பட்டன என்பது கூடுதல் ஒற்றுமை.


இதே வருடத்தில், இதேநாளில், ‘சுமதி என் சுந்தரி’யுடன் வெளியான ‘பிராப்தம்’ நடிகை சாவித்திரி தயாரித்து, இயக்கி, நடித்த ஒரே படம். மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்த இந்தப் படம், சாவித்திரிக்கு பொருள் நஷ்டத்தையும் மன உளைச்சலையும் கொடுத்தது.


பிறகு, 1970-ம் ஆண்டில், ‘எங்கிருந்தோ வந்தாள்’ திரைப்படமும் ‘சொர்க்கம்’ திரைப்படமும் ஒரேநாளில் வெளியானது. ‘எங்கிருந்தோ வந்தாள்’ படத்தை சிவாஜியின் நண்பரும் நடிகருமான கே.பாலாஜி தயாரித்தார். இதுவொரு வண்ணப்படம். அதேபோல், டி.ஆர்.ராமண்ணா தயாரித்து இயக்கிய ‘சொர்க்கம்’ படமும் கலர்படம்.


ஜெயலலிதா மிகச்சிறப்பான நடிப்பாற்றலை வெளிக்காட்டிய படம் என்று ‘எங்கிருந்தோ வந்தாள்’ படத்தை இன்றைக்கும் கொண்டாடுகின்றனர் ரசிகர்கள். எல்லாப் பாடல்களும் ஹிட். அதேபோல், கே.ஆர்.விஜயா ஜோடியாக நடித்த ‘சொர்க்கம்’ திரைப்படமும் கலர்படமாக வந்தது. வெற்றிப்படமாக அமைந்தது. இந்தப் படத்திலும் எல்லாப் பாடல்களும் பிரபலம். முக்கியமாக, ‘சொல்லாதே யாரும் கேட்டால்’, ‘பொன்மகள் வந்தாள்’, ‘ஒரு முத்தாரத்தில் முப்பது முத்துகள் கோர்த்து வைத்திருந்தேன்’ என பல பாடல்கள் இன்றைக்கும் மறக்கமுடியாத பாடல்களாக அமைந்தன.


இப்படி ஒரேநாளில், இரண்டுபடங்கள் வந்தாலும், அதில் ஒவ்வொரு படத்துக்கும் வெரைட்டி காட்டி நடித்திருப்பார். ’பிராப்தம்’ தவிர எல்லாப் படங்களுமே பெரிய அளவிலான பொருள் நஷ்டத்தையெல்லாம் கொடுக்கவில்லை.


இப்படி ஒரேநாளில், ஒரு நடிகர் நடித்த இரண்டு படங்கள் இத்தனை முறை ரிலீசாகியிருப்பது, வேறு எந்த நடிகரும் செய்யாத சாதனை என்கிறார்கள் சிவாஜி ரசிகர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x