Published : 19 Dec 2019 12:40 PM
Last Updated : 19 Dec 2019 12:40 PM

எனது வீட்டில் வன அதிகாரிகள் சோதனையா? - அஜித் மேலாளர் மறுப்பு

தன் வீட்டில் வன அதிகாரிகள் சோதனை நடைபெறுவதாக வெளியான செய்திக்கு அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா மறுப்பு தெரிவித்துள்ளார்.

அஜித்தின் மேலாளராகப் பணிபுரிந்து வருபவர் சுரேஷ் சந்திரா. அஜித்தின் படம் குறித்த தகவல்கள், அவரது பயணம் உள்ளிட்ட விவரங்கள் அனைத்துமே இவருக்குத்தான் தெரியும். இவருக்கு மிருகங்கள் வளர்ப்பில் ஆர்வம் அதிகம். தன் வீட்டில் நாய், கோழி, மாடுகளை வளர்த்து வருகிறார்.

இதனிடையே இவர் வீட்டில் பாம்பு ஒன்றை வளர்த்து வருவதாக, சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியானது. அஜித்தின் மேலாளர் பாம்பு வளர்க்கிறார் என்று பலரும் செய்திகளை வெளியிட்டு வந்தனர்.

இந்தச் செய்தி வைரலாகப் பரவியதைத் தொடர்ந்து, வன அதிகாரிகள் சுரேஷ் சந்திரா வீட்டில் சோதனை நடத்தி வருவதாக, தொலைக்காட்சியில் செய்திகள் வெளியாகின. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அஜித் வீட்டில் சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.

இந்தச் செய்திக்கு சுரேஷ் சந்திரா மறுப்பு தெரிவித்துள்ளார். அஜித் பெயருக்குக் களங்கம் விளைவிக்கவே இம்மாதிரியான செய்திகள் பரப்பப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளார். மேலும், வன அதிகாரிகள் சோதனை செய்தி தொடர்பாக, "என் வீட்டில் வனத்துறை சோதனை நடத்துகிறது என்று தவறான செய்திகள் சில ஊடகங்களில் வந்தன. அவை அடிப்படை ஆதாரமற்றவை. தயவுசெய்து தவறான செய்தியைப் புறக்கணித்துவிடுங்கள்" என்று தெரிவித்துள்ளார் சுரேஷ் சந்திரா.

தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் இருக்கிறார் அஜித். போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் நாயகியாக யாமி கெளதம் நடித்து வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x