Published : 17 Dec 2019 03:21 PM
Last Updated : 17 Dec 2019 03:21 PM

மேடம் டுஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் காஜல் மெழுகுச் சிலை

சிங்கப்பூரில் இருக்கும் மேடம் டுஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் நடிகை காஜல் அகர்வாலின் மெழுகுச் சிலை வைக்கப்படவுள்ளது.

லண்டனில் இருக்கும் மேடம் டுஸாட்ஸ் அருங்காட்சியகம், பிரபலங்களின் மெழுகுச் சிலைக்குப் பெயர்போனது. இது லண்டனின் முக்கியமான சுற்றுலாத் தலமும் கூட. இந்த அருங்காட்சியகத்தின் கிளைகள் உலகில் பல்வேறு நாடுகளில் திறக்கப்பட்டுள்ளன. அந்தந்த நாடுகளில் பிரபலமானவர்களின் மெழுகுச் சிலைகள் இங்கு வைக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் இருக்கும் அருங்காட்சியகத்தில் பிரபல திரைப்பட நட்சத்திரங்களின் மெழுகுச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த வருடம் ஏப்ரல் மாதம், பாலிவுட் பிரபலம் கரண் ஜோஹரின் சிலையோடு இக்கிளை திறக்கப்பட்டது. தற்போது நடிகை காஜல் அகர்வாலின் மெழுகுச் சிலையும் இங்கு வைக்கப்படவுள்ளது. இந்தத் தகவலை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். பிப்ரவரி 5, 2020-ல் இந்தச் சிலை திறப்பு விழா நடக்கவுள்ளது.

சிறிய வயதில் மேடம் டுஸாட்ஸ் அருங்காட்சியகத்தைப் பார்த்து வியந்திருப்பதாகவும், அதை மிகவும் விரும்பியதாகவும், தற்போது அங்கு என் மெழுகுச் சிலை இடம் பெறுவது மிக்க மகிழ்ச்சியைத் தருவதாகவும் காஜல் அகர்வால் கூறியுள்ளார். இந்தச் சிலையோடு சேர்த்து, ஒரு படப்பிடிப்புத் தளத்தின் மாதிரியும் அமைக்கப்படவுள்ளது. இதில் காஜல் அகர்வால் சிலையுடன் பார்வையாளர்கள் நடிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x