Published : 11 Dec 2019 02:55 PM
Last Updated : 11 Dec 2019 02:55 PM

‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு: ஜெயம் ரவி, கார்த்தி தாய்லாந்து பயணம்

மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்புக்காக ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்ட படக்குழுவினர் தாய்லாந்து சென்றுள்ளனர்.

அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்க வேண்டும் என்பது இயக்குநர் மணிரத்னத்தின் கனவு. ‘செக்கச்சிவந்த வானம்’ படத்துக்குப் பிறகு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தார். லைகா புரொடக்‌ஷன்ஸ் வழங்கும் இந்தப் படத்தை, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கிறது.

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, தோட்டா தரணி கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்.

முன்னரே தொடங்கியிருக்க வேண்டிய படப்பிடிப்பு, சில பிரச்சினைகள் காரணமாகத் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இதனால், இதில் நடிப்பதாக இருந்த பார்த்திபன் உள்ளிட்ட சில நடிகர்கள், தேதிகள் இல்லாத காரணத்தால் படத்தில் இருந்து விலகிக் கொண்டனர்.

இந்நிலையில், முதற்கட்டப் படப்பிடிப்புக்காக ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்ட படக்குழுவினர் தாய்லாந்து சென்றுள்ளனர். இன்று (டிசம்பர் 11) அல்லது நாளை படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x