Published : 10 Dec 2019 05:30 PM
Last Updated : 10 Dec 2019 05:30 PM

28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரஜினியுடன் இணையும் குஷ்பு

28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரஜினியுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் குஷ்பு

சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு இமான் இசையமைக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

இதில் ரஜினியுடன் நடிக்கவுள்ளவர்களை அதிகாரபூர்வமாக அறிவித்து வருகிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இதுவரை மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி ஆகியோர் நடிக்கவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.

தற்போது ரஜினியுடன் குஷ்பு நடிக்கவுள்ளார் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 1992-ம் ஆண்டு வெளியான 'மன்னன்' மற்றும் 'அண்ணாமலை' ஆகிய படங்களைத் தொடர்ந்து ரஜினி - குஷ்பு இணைந்து நடிக்கவில்லை. அதற்குப் பிறகு தற்போது சிவா இயக்கும் படத்தில் ரஜினியுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஜினியுடன் நடிக்கவுள்ளது குறித்து குஷ்பு, "28 ஆண்டுகள் கழித்து ரஜினியுடன் நடிக்கவுள்ள சந்தோஷமே தனி. நிறையப் படங்கள் ரஜினி சாரோடு பண்ணியிருக்கேன். மக்கள் எங்கள் இருவரையும் படங்களில் பார்க்கும் போது ரசித்திருக்கிறார்கள். தமிழ் படங்கள் 9 வருடங்கள் வரை பண்ணாமலேயே இருந்தேன்.

நல்ல படங்களாக, பெரிய படங்களாக பண்ணனும் என இருந்தேன். பத்தோடு ஒன்றாக இருக்க வேண்டாம் என நினைத்தேன். சன் பிக்சர்ஸ் நிறுவனமும் - இயக்குநர் சிவாவும் இந்தக் கதாபாத்திரம் கொடுத்தார்கள். ரொம்ப வித்தியாசமான கதாபாத்திரம், சந்தோஷமாக இருந்தது. படம் வெளியாகும் போது, ரஜினி சாரோடு எப்படி நடித்துள்ளேன், மீண்டும் ஏற்றுக் கொள்வீர்களா எனச் சொல்லுங்கள்" என்று தெரிவித்துள்ளார் குஷ்பு

இந்தப் படத்துக்கு வெற்றி ஒளிப்பதிவாளராகவும், ரூபன் எடிட்டராகவும் பணிபுரியவுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x