Published : 05 Dec 2019 04:26 PM
Last Updated : 05 Dec 2019 04:26 PM

'நீதான் திறமையான ஆள்; நீதான் சூப்பர் ஸ்டார்': பிரனவிடம் நெகிழ்ந்த ரஜினி

பிரனவைச் சந்திக்கும் போது 'நீதான் திறமையான ஆள்; நீதான் சூப்பர் ஸ்டார்' என்று கூறியுள்ளார் ரஜினி.

கேரள மாநிலம் ஆலத்தூரைச் சேர்ந்த இளைஞர் பிரனவ். இரண்டு கைகள் இல்லாத மாற்றுத்திறனாளி இளைஞர். ஓவியரான இவர் கேரளாவுக்கு மகா புயல் நிவாரண நிதி அளித்தார். அதைப் பாராட்டி கேரள முதல்வர் நேரில் அழைத்து பிரனவிடம் இருந்து நிவாரண நிதியைப் பெற்றுக்கொண்டார். அவரது காலை பிடித்துக் குலுக்கி நன்றி தெரிவித்தார். அவருடன் பினராயி விஜயன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். காலால் செல்போனில் செல்ஃபி எடுக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தைச் சந்திக்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசையை பேட்டியொன்றில் வெளிப்படுத்தியிருந்தார் பிரனவ். அவர் பேட்டியளித்த சில நாட்களிலேயே பிரனவ் தனது இல்லத்தில் சந்தித்தார் ரஜினி.

தற்போது ரஜினியைச் சந்தித்தது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார் பிரனவ். அதில், "மதிப்பிற்குரிய கேரள முதல்வருடன் எடுக்கப்பட்ட என்னுடைய புகைப்படம் குறித்துப் பேட்டியளித்தேன். அதில் என்னுடைய ஆசை சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்திப்பதே என்று குறிப்பிட்டு இருந்தேன். அந்த ஆசை இவ்வளவு விரைவில் நிறைவேறும் என்று கனவிலும் நான் நினைக்கவில்லை. கராத்தே தியாகராஜன் சார் தான் எல்லா ஏற்பாடுகளையும் கவனித்துக் கொண்டார். மாலை 5:30 மணிக்கு சூப்பர் ஸ்டார் இல்லத்தை அடைந்தோம். 15 நிமிட நேர படபடப்புடன் கூடிய காத்திருப்பு! சரியாக 5:45 மணிக்கு உலகின் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தன் மந்தகாசப் புன்னகையுடன் எனக்கு வணக்கம் தெரிவித்துக்கொண்டு என்னருகில் மின்னலாய் வந்து வரவேற்றார்!

‘தமிழ் தெரியுமா தமிழ் தெரியுமா?!’ என்று தனக்கே உரிய ஸ்டைலில் வினவினார். நான் கொஞ்சம் கொஞ்சம் தெரியும் என்றேன் பிரமிப்பு விலகாமல். ‘என்னுடைய எந்தெந்தப் படங்களைப் பாத்திருக்கீங்க?’ என்று கேட்டார். ’நிறைய படங்கள் பார்த்திருக்கேன் சார். ஆனா, என்னுடைய ஆல்டைம் ஃபேவரிட் பாட்ஷா தான்’ என்றதும் ’ஹா ஹா ஹா’ என்று தனக்கே உரிய சிரிப்பை உதிர்த்தார். என்னுடைய தாய், தந்தை மற்றும் குடும்பத்தாரை அறிமுகம் செய்து வைத்தேன். அனைவருக்கும் வணக்கம் தெரிவித்துவிட்டு எனக்குப் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்த முற்பட்ட சூப்பர் ஸ்டாரிடம், அதை என் பெற்றோருக்கு அணிவிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.

அதற்கு ’அவர் நீதான் திறமையான ஆள். நீதான் சூப்பர் ஸ்டார்’ என்று கூறிக்கொண்டு எனக்குப் பொன்னாடை போர்த்தினார். கூடவே ஒரு பாக்ஸ் நிறைய சாக்லேட்டுகள் மற்றும் வெள்ளியில் பதிக்கப்பட்ட மகா அவதார் பாபாஜியின் புகைப்படத்தைப் பரிசளித்தார். ’என்ன வேலை பார்க்குறீங்க’ என்று கேட்டார். நான் தச்சு வேலை செய்கிறேன். என்றேன். தானும் பத்தாம் வகுப்பு ஃபெயில் ஆன பிறகு ஒன்றரை வருடம் தச்சு வேலை செய்து கொண்டிருந்தேன் என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

பிறகு செல்ஃபி எடுத்துக்கொண்டு அவரிடம் ஆசி வாங்கிக் கொண்டேன். ஏறத்தாழ 30 நிமிடங்கள் இந்தச் சந்திப்பு நீண்டது. என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டு என்னுடைய உறுதுணை உனக்கு எப்பவும் இருக்கு என்று கூறி விடையளித்தார். அவரின் இந்த எளிமை குணமே அவரை இந்த அளவு உயர்த்தி இருக்கிறது என்று எண்ணிக் கொண்டேன். எவ்வளவு உயரங்களை அடைந்தாலும் மமதை கொள்ளக்கூடாது என்று தன்னுடைய குணத்தால் சொல்லாமல் சொன்னார் நம் சூப்பர் ஸ்டார். ஆண்டவனுக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார் பிரனவ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x