Published : 04 Dec 2019 08:51 PM
Last Updated : 04 Dec 2019 08:51 PM

வெங்கட் பிரபு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ்

வெங்கட் பிரபு இயக்கவுள்ள புதிய படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘சென்னை 28’ இரண்டாம் பாகம். 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தப் படம் வெளியானது. அதன்பிறகு ‘பார்ட்டி’ என்ற படத்தை இயக்கினார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து பல மாதங்கள் ஆனாலும் இன்னும் படம் வெளியாகவில்லை.

ஜெய், சிவா, சத்யராஜ், ஜெயராம், ஷாம், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ், நாசர், சந்திரன், சுரேஷ், விஜய் வசந்த், அரவிந்த் ஆகாஷ் என ஏராளமான நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, சிம்பு நடிப்பில் ‘மாநாடு’ படத்தை வெங்கட் பிரபு இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆகியும் படப்பிடிப்பு தொடங்கவில்லை. எனவே, ‘மாநாடு’ படத்தில் இருந்து சிம்பு நீக்கப்படுவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார்.

பின்னர், பல சமரச முயற்சிகளுக்குப் பிறகு ‘மாநாடு’ படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் சிம்பு. அடுத்த வருடம் (2020) ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.

இந்நிலையில், ராகவா லாரன்ஸுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு, சிம்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார் வெங்கட் பிரபு. அந்தப் புகைப்படத்தில், ‘நல்லதே நினைப்போம், நல்லதே பேசுவோம், நல்லதே நடக்கும். விரைவில் அப்டேட்’ எனத் தெரிவித்துள்ளார்.

எனவே, ராகவா லாரன்ஸை வைத்து வெங்கட் பிரபு படம் இயக்குவது உறுதியாகிவிட்டது. ஆனால், அது எப்போது என்பதுதான் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஒருவேளை ‘மாநாடு’ படத்துக்கு முன்னரே இதன் படப்பிடிப்பு தொடங்கிவிடுமா? என்ற கேள்வி சிம்பு ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

அக்‌ஷய் குமார் நடிப்பில் ‘லக்‌ஷ்மி பாம்’ படத்தை இயக்கி முடித்துள்ள ராகவா லாரன்ஸ், இயக்கத்தை ஓரம் வைத்துவிட்டு, படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். எனவே, ‘ரங்கஸ்தலம்’ தமிழ் ரீமேக்கின் உரிமையை வாங்கியுள்ளார். இந்தப் படத்தை லிங்குசாமி இயக்கப் போகிறார்.

ஆக, இதுதான் ராகவா லாரன்ஸின் அடுத்த படமாக இருக்கப் போகிறது. அதற்குள் சிம்புவின் ‘மாநாடு’ படப்பிடிப்பை முடித்துவிட்டு, அதன்பிறகே ராகவா லாரன்ஸை இயக்கப் போகிறார் வெங்கட் பிரபு என்கிறார்கள். அதனால், ‘மாநாடு’ படம் திட்டமிட்டபடி ஜனவரியில் தொடங்கும் எனத் தெரிகிறது.

லிங்குசாமி, வெங்கட் பிரபுவைத் தொடர்ந்து, கெளதம் மேனனிடமும் கதை கேட்டுள்ளார் ராகவா லாரன்ஸ் என்றொரு தகவலும் உலா வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x