Published : 04 Dec 2019 04:43 PM
Last Updated : 04 Dec 2019 04:43 PM
படங்களில் பெண்களைக் காட்சிப் பொருளாக்குவதை நிறுத்த வேண்டிய நேரம் இது என்று இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த கால்நடை பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் இந்தியா முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து முகமது பாஷா, சிவா, நவீன் மற்றும் சென்ன கேசவுலு ஆகியோரைக் கைது செய்துள்ளது காவல்துறை.
கால்நடை பெண் மருத்துவர் மரணம் தொடர்பாக பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் தங்களுடைய கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தனர். தற்போது இந்த விவகாரம் தொடர்பாகப் பாடலாசிரியர் ஷான் ரோல்டன் தனது ட்விட்டர் பதிவில் "இந்தச் சம்பவம் நம் தேசத்தின் ஆன்மாவை உலுக்கிவிட்டது. மருத்துவரின் குடும்பத்துக்கு லட்சம் பிரார்த்தனைகள் போய் சேரட்டும்.
நான் உணரும் கோபத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. எப்போதுமே இந்தச் சமூகத்தின் பெரும்பான்மையானவர்களை என் வாழ்வில் உயர்வாக நினைத்ததில்லை. ஆனால், இது வேறொரு தளத்தில் இருக்கிறது. திரைப்படங்கள் பெண்களைக் காட்சிப் பொருளாக்குவதை நிறுத்த வேண்டிய நேரம் இது. பாலிவுட் திரையுலகினரே கவர்ச்சி, ஆபாசப் பாடல்களை இப்போதே நிறுத்துங்கள். நடிகைகளே, அப்படியான படங்களைத் தயவு செய்து நிராகரித்து விடுங்கள்” என்று தெரிவித்துள்ளார் ஷான் ரோல்டன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT