Published : 04 Dec 2019 02:11 PM
Last Updated : 04 Dec 2019 02:11 PM
மணிரத்னம் இயக்கவுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்திலிருந்து கால்ஷீட் தேதிகள் பிரச்சினை காரணமாக பார்த்திபன் விலகியுள்ளார்.
'செக்கச்சிவந்த வானம்' படத்தைத் தொடர்ந்து, 'பொன்னியின் செல்வன்' படத்தை இயக்கத் தயாராகி வருகிறார் மணிரத்னம். லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இதன் படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கவுள்ளது. லைகா நிறுவனம் வழங்க முதல் பிரதி அடிப்படையில் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இந்தப் படத்தில் பார்த்திபன் நடிக்கவுள்ளதைத் தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தினார். அதற்குப் பிறகு தனது 'ஒத்த செருப்பு' படப் பணிகளில் தீவிரமடைந்தார். தற்போது 'பொன்னியின் செல்வன்' படத்திலிருந்து பார்த்திபன் விலகியிருப்பதாகத் தகவல் வெளியானது.
இது தொடர்பாக விசாரித்தபோது, 'ஒத்த செருப்பு' படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான முதற்கட்டப் பணிகளில் பார்த்திபன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மேலும், அவர் நடிப்பதாக ஒப்புக்கொண்ட படங்களின் படப்பிடிப்பும் இருக்கிறது.
இதன் இரண்டுக்கும் இடையே 'பொன்னியின் செல்வன்' படத்துக்காகத் தேதிகளை ஒதுக்கி நடிக்க பார்த்திபனால் முடியாமல் போனது. மேலும், படம் 2 பாகங்களாக உருவாகவுள்ளதால் தொடர்ச்சியாக 6 மாதங்கள் வரை படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. அவ்வளவு தேதிகள் ஒதுக்கவும் பார்த்திபனால் முடியாததும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.
'பொன்னியின் செல்வன்' படத்தின் கலை இயக்குநராக தோட்டாதரணி, இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், பாடலாசிரியராக வைரமுத்து ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இதன் முதற்கட்டப் படப்பிடிப்பில் தாய்லாந்தில் சண்டைக் காட்சி ஒன்றை படமாக்கவுள்ளது படக்குழு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT