Published : 03 Dec 2019 06:48 PM
Last Updated : 03 Dec 2019 06:48 PM

முடிவடைந்தது 'மாநாடு' பிரச்சினை: ஜனவரி 20-ம் தேதி முதல் படப்பிடிப்பு

அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு ஜனவரி 20-ம் தேதி முதல், 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.

'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தைத் தொடர்ந்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் 'மாநாடு' படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சிம்பு. சுரேஷ் காமாட்சி இப்படத்தைத் தயாரிக்கவுள்ளார். 'மாநாடு' தொடர்பான தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் ஒப்பந்தம் அனைத்துமே முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து சிம்புவின் கால்ஷீட் தேதிகளுக்காகப் படக்குழு காத்திருந்தது.

ஆனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சிம்புவுக்குப் பதிலாக வேறொருவர் நடிப்பார் என்று படக்குழு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து நீண்ட நாட்களாகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்தப் பேச்சுவார்த்தையில் தயாரிப்பாளர் சங்கம், சுரேஷ் காமாட்சி மற்றும் சிம்பு தரப்பினர் ஈடுபட்டனர்.

'மாநாடு' படத்துக்கென்று பிரத்யேக ஒப்பந்தம் தயார் செய்யப்பட்டது. இதனை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தியாகராஜன் தயார் செய்தார். இந்த ஒப்பந்தத்தை முன்வைத்து மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், அதில் சிம்பு கையெழுத்திடாமல் இருந்தார். தற்போது பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டு, ஒப்பந்தத்தில் சிம்பு கையெழுத்திட்டுள்ளார். இதன் பிரதிகள் சிம்புவுக்கும், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 20-ம் தேதி முதல் ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்புக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் சிம்பு. ஏப்ரல் 30-ம் தேதி வரை படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. அதற்குள் சுமார் 70 நாட்கள் வரை சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார். முன்பு இந்தப் படத்துக்காக நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட கல்யாணி ப்ரியதர்ஷனிடம், படப்பிடிப்புக்கான தேதிகள் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. பாரதிராஜா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

ஒளிப்பதிவாளராக ஏகாம்பரம், இசையமைப்பாளராக யுவன், தயாரிப்பு வடிவமைப்பாளராக ராஜீவன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். 'மாநாடு' படத்தின் பணிகள் மும்முரமாகத் தொடங்கப்பட்டுள்ளதால், சிம்பு ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x