Published : 29 Nov 2019 12:15 PM
Last Updated : 29 Nov 2019 12:15 PM

வெளியானது 'எனை நோக்கி பாயும் தோட்டா': கெளதம் மேனன் நெகிழ்ச்சி- வெளியீடு சாத்தியமானது எப்படி?

அனைத்துப் பிரச்சினைகளையும் கடந்து 'எனை நோக்கி பாயும் தோட்டா' வெளியானதை கெளதம் மேனன் தனது ட்விட்டர் பதிவில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

கெளதம் மேனன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவான படம் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’. எண்டெர்டெயின்மென்ட் மற்றும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்தது. இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்துமே இணையத்தில் பயங்கர ஹிட்டாகியுள்ளதால், படம் எப்போது வெளியீடு என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், கெளதம் மேனன் மற்றும் மதன் ஆகியோருக்கு இருந்த பைனான்ஸ் பிரச்சினையால் இந்தப் படத்தின் வெளியீடு பலமுறை அறிவிக்கப்பட்டுத் தள்ளிவைக்கப்பட்டது. இறுதியாக செப்டம்பர் 6-ம் தேதி வெளியிட பெரும் முயற்சி செய்யப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி வெளியாகவில்லை.

அனைத்துப் பிரச்சினைகளையும் கடந்து, இன்று (நவம்பர் 29) வெளியாகியுள்ளது 'எனை நோக்கி பாயும் தோட்டா'. காலை வரைக்குமே படத்துக்கான க்யூப் கீ கொடுக்கப்படவில்லை. இதனால், திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் சிறிய சலசலப்பு ஏற்பட்டது. காலை 8 மணியளவில் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு, க்யூப் கீ கொடுக்கப்பட்டதாகத் தயாரிப்பாளர் மதன் தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தினார்.

தமிழகம் முழுக்க 8:30 மணியளவில் முதல் காட்சி தொடங்கப்பட்டது. இதனை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். சென்னையில் உள்ள கோயம்பேடு ரோகிணி திரையங்கில் கெளதம் மேனன் ரசிகர்களுடன் படத்தைப் பார்வையிட்டார்.

படம் வெளியாவது உறுதியானவுடன் கெளதம் மேனன் தனது ட்விட்டர் பதிவில் "ஐசரி கணேஷும் அவரது பெருந்தன்மையும் இல்லையென்றால் இந்தப் படத்தின் வெளியீடு இன்று சாத்தியப்பட்டிருக்காது. இன்று ஒரு தைரியமான, பெரிய மனம் கொண்டவரைப் பார்த்துவிட்டேன். இந்த வெளியீட்டில் எங்களுக்கு உதவிய தமிழக விநியோகஸ்தர்களுக்கும் பெரிய நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

எப்படிச் சாத்தியமானது வெளியீடு?

'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் மீதிருந்த அனைத்து பைனான்ஸ் பிரச்சினைகளையும் வேல்ஸ் நிறுவனம் கையில் எடுத்தது. அதை தீர்ப்பதற்கு கெளதம் மேனன் இயக்கத்தில் 3 படங்களை உருவாக்கவுள்ளது. இதில் முதலாவதாக 'ஜோஷ்வா' அடுத்தாண்டு காதலர் தினத்துக்கு வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் அனுஷ்கா நடிக்கும் படத்தைத் தயாரிக்கவுள்ளனர். இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கும் மற்றொரு படத்தையும் தயாரிக்கவுள்ளனர். இந்த மூன்று படங்களின் சம்பளத் தொகையை வைத்தே, 'எனை நோக்கி பாயும் தோட்டா' பிரச்சினைகள் அனைத்தும் முடிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x