Published : 13 May 2014 05:57 PM
Last Updated : 13 May 2014 05:57 PM

மே 23-ல் கோச்சடையான் ரிலீஸ்: தயாரிப்பாளர் உறுதி

கோச்சடையான் திரைப்படம் இம்மாதம் 23-ம் தேதி வெளியாவது உறுதி என்று தெரிவித்துள்ள அப்படத்தின் தயாரிப்பாளர், தொழில்நுட்ப காரணங்களால்தான் பட ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், 'ஈராஸ் இண்டர்நேஷனல் வழங்க, மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பில், சௌந்தர்யா ரஜினிகாந்த் அஷ்வின் இயக்கியுள்ள படம் கோச்சடையான்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோன் நடிக்கும் கோச்சடையான் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, பஞ்சாபி, போஜ்பூரி, மாராட்டி என ஆறு இந்திய மொழிகளில் வெளியாகிறது.

இந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் ஆறு மொழிகளில் வெளியிடப்படும் முதல் திரைப்படம் கோச்சடையான்தான்.

இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோன் உடன் ஆர்.சரத்குமார், ஜாக்கி ஷேரோப், ஆதி, நாசர், ஷோபனா, ருக்மிணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை கே.எஸ்.ரவிக்குமார் எழுதியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் கவிஞர் வாலி, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளனர். படத்தொகுப்பு - ஆண்டனி. ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி இப்படத்தின் ஒலிப்பதிவை கவனித்திருக்கிறார்.

கலை: வேலு, நடனம்: சரோஜ்கான், சின்னி பிரகாஷ், ராஜுசுந்தரம், உடைகள் வடிவமைப்பு: நீத்தாலுல்லா, சண்டைப்பயிற்சி: மிராக்கிள் மைக்கேல். கிரியேட்டிவ் கன்ஸல்டண்ட்டாக ஆர்.மாதேஷ் பணியாற்றி உள்ளார்.

கோச்சடையான் படம் மே மாதம் 9 ஆம் தேதி வெளியாகவிருந்தது. கோச்சடையான் 3டி வடிவத்தில் தமிழ் தவிர தெலுங்கு, ஹிந்தி உட்பட ஆறு மொழிகளில் தயாராவதால் தொழில்நுட்பக் காரணங்களினால் தேதியை தள்ளிவைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மாற்று தேதியையும் தெளிவுபடுத்தி இருந்தோம்.

இந்நிலையில், சில பத்திரிகை மற்றும் இணையதளங்களில் கோச்சடையான் படத்தைப் பற்றி உண்மையற்ற செய்திகள் வெளிவந்திருப்பதாக அறிகிறோம்.

கோச்சடையான் திரைப்படம் 6 மொழிகளிலும் 2டி வடிவத்தில் தயாராகி ஏற்கெனவே தணிக்கை செய்யப்பட்டு சான்றிதழ் பெறப்பட்டுவிட்டது.

மேலும், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் 3டி வடிவத்தில் தயாரான திரைப்படத்துக்கும் தணிக்கை செய்யப்பட்டுவிட்டது.

3டி வடிவத்தில் தயாராக கூடுதல் கால அவகாசம் தேவைப்பட்டதால்தான் குறிப்பிட்ட தேதியில் படத்தை வெளியிட இயலவில்லை.

இது தவிர, ஏற்கனவே சுமார் 4000 திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், சென்னையில் முன்பதிவு துவங்கிய இரண்டு மணி நேரத்திற்குள் 1.25 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுவிட்டன. அதன் பிறகு மேலும் 2000 திரையரங்குகள் கோச்சடையான் படத்தை திரையிட முன்வந்துள்ளன' என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x