Published : 26 Nov 2019 03:18 PM
Last Updated : 26 Nov 2019 03:18 PM

சினிமா தொழில்நுட்பக் கலைஞர்களில் சூப்பர் ஸ்டார் என் அப்பா: இயக்குநர் மோகன் ராஜா நெகிழ்ச்சி

சினிமா தொழில்நுட்பக் கலைஞர்களில் சூப்பர் ஸ்டார் என் அப்பா என்று இயக்குநர் மோகன் ராஜா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

தென்னிந்தியத் திரையுலகின் பிரபலமான எடிட்டர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பல துறைகளில் பணிபுரிந்து வருபவர் எடிட்டர் மோகன். 50 ஆண்டுகளுக்கும் மேலான தனது திரையுலக அனுபவங்களைத் தொகுத்து 'தனிமனிதன்' என்ற புத்தகம் எழுதியுள்ளார். அவரது துணைவியார் வரலட்சுமி மோகன் திருக்குறள் போதிக்கும் அறம் மற்ற அனைத்து இலக்கியத்திலும் நிறைந்திருப்பதை ஆராய்ந்து அதை இன்றைய தலைமுறைக்குப் பயன் தரும் வகையில் 'வேலியற்ற வேதம்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இரண்டு புத்தகங்களின் வெளியீட்டு விழா டிசம்பர் 3-ம் தேதி முன்னணி திரையுலகப் பிரபலங்கள் முன்னிலையில் வெளியிடப்படவுள்ளது.

தனது பெற்றோர் எழுதியுள்ள புத்தகங்கள் வெளியாகவுள்ளது குறித்து இயக்குநர் மோகன் ராஜா, "எனது குடும்பத்தின் முக்கிய நிகழ்வு. மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கிறேன். இருவரும் தங்களது வாழ்க்கை அனுபவங்களைப் புத்தகமாக எழுதியிருக்கிறார்கள். அம்மாவைப் பொறுத்தவரை அப்பாவைப் பற்றி பேசினாலே அம்மாவின் வாழ்க்கை முழுமையானதாகச் சொல்வார்கள். அதனால் அவரது அறிவுப் பக்கத்தை நூலாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

என் அம்மா எளிமையான குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயது முதலே இலக்கியங்களில் அதிக ஆர்வம் கொண்டவர். பள்ளியில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் அதிக குறள்களை ஒப்புவித்து தேர்ச்சி பெற்றவர். கல்யாணம் முடிந்தவுடன் அப்பாவின் ஆதரவில் கல்லூரி படித்தார். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் எம்.ஏ. முடித்தவர். திருக்குறள் மீது அதிக காதல் கொண்டவர். திருக்குறளில் இருக்கும் கருத்துகள் மற்ற இலக்கியங்களிலும் சொல்லப்பட்டிருப்பதைக் கண்டு வியந்து அதைத் தொகுத்திருக்கிறார். இரண்டு ஆண்டுகளாக அவரை எந்த நேரத்தில் சந்தித்தாலும் இந்தப் புத்தக வேலையாகவே தான் இருந்தார். திருக்குறளின் அறம் அனைத்து இலக்கியங்களிலும் நிறைந்திருப்பதைத் தொகுத்துப் புத்தகமாக உருவாக்கியிருக்கிறார். இன்றைய இளைய தலைமுறைக்குப் பயன்படும் ஒரு புத்தகமாக இது இருக்கும்.

அப்பாவைப் பொறுத்தவரை அவர் தான் என் ஹீரோ. அவரிடம் சினிமா கற்றுக்கொண்டேன். சினிமா கருப்பு வெள்ளை காலத்திலிருந்தே அப்பாவுக்குத் தெரியும். அவரது அனுபவம் பெரிது. நடந்தே சென்னை வந்து சேர்ந்து, சின்னச் சின்ன வேலைகள் செய்து பெரிய நிலைக்கு உயர்ந்தவர். பிரபல குணச்சித்திர, காமெடி நடிகர் டணால் தங்கவேல் அவர்களின் வளர்ப்பு மகனாக வளரும் பாக்கியம் பெற்றார். அப்போது அங்கு தியாகராஜா பாகவதர் முதல் சின்னப்ப தேவர் வரை எல்லோரும் வந்து போகும் இடமாக இருந்தது. அதன் மூலம் சினிமா கற்றுக்கொண்டு உயர்ந்தவர்.

தன் அனுபவங்கள் அனைத்தையும் புத்தகமாக உருவாக்கியிருக்கிறார். நாங்கள் ஏன் அவரைக் கொண்டாடுகிறோம் என்பதற்குப் பதில் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது. வாழ்க்கையில் வெற்றி எனும் ஒரு வழிப்பாதையை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டவர். சினிமாவில் தொழில்நுட்பக் கலைஞர்களில் சூப்பர் ஸ்டார் என என் அப்பாவைச் சொல்வேன். அவரது வாழ்க்கை பிரமிப்பானது. அவரிடம் தான் சினிமாவின் அனைத்துத் துறைகளையும் கற்றுக் கொண்டேன். 12 ஆண்டுக்காலம் தெலுங்கில் 10 சில்வர் ஜூப்ளி படங்கள் தயாரித்திருக்கிறார். 100-க்கும் மேற்பட்ட படங்களில் எடிட்டராக பணியாற்றியிருக்கிறார். 50-க்கும் மேற்பட்ட மொழி மாற்றப் படங்கள் செய்துள்ளார். சினிமா சங்கங்களில் பதவியில் இருந்துள்ளார். அவரது அனுபவம் எல்லோருக்கும் தெரிய வேண்டியது. புத்தகமாக வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் மோகன் ராஜா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x