Published : 25 Nov 2019 08:25 PM
Last Updated : 25 Nov 2019 08:25 PM
நான் சிரித்து ரொம்ப நாட்களாகிவிட்டது என்று வேல்ஸ் நிறுவனத்தின் வெற்றி விழாவில் இயக்குநர் கெளதம் மேனன் பேசினார்.
2019-ம் ஆண்டு வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட ‘கோமாளி’, 'எல்.கே.ஜி' மற்றும் ‘பப்பி’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதற்கான வெற்றி விழா கொண்டாட்டம் சென்னையில் நேற்று (நவம்பர் 24) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு நினைவுப் பரிசுகளை வழங்கினார்.
இந்த விழாவில் வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளிவரவுள்ள '‘சுமோ’, ‘சீறு’, ‘ஜோஷ்வா’, ‘மூக்குத்தி அம்மன்’, 'எனை நோக்கி பாயும் தோட்டா' ஆகிய படங்களின் அறிமுக விழாவும் நடைபெற்றது.
இந்த விழாவில் இயக்குநர் கெளதம் மேனன் பேசும் போது, "என் வீட்டுக்குப் போகும் போது எனது சந்தோஷங்கள், கஷ்டங்கள், வேலைகள் என அனைத்தையும் மறந்துவிடுவேன். வீட்டிலிருந்து வெளியே வரும் போது வேலையை ரசித்து, சிரித்துச் செய்து ரொம்ப நாட்களாகிவிட்டது. அது தான் உண்மை. ஆனால், கடைசி 2 மாதமாக என் சிரிப்புக்கு காரணமாக இருக்கும் ஐசரி கணேஷ் சாருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் சிரிப்புக்கு மட்டுமல்ல என் குழுவின் சிரிப்புக்கும் அவர் தான் காரணம்.
'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் வெளியாவதற்கு ஐசரி கணேஷ் சார் தான் காரணம். அவர் இல்லையென்றால் அந்தப் படம் வெளியாகாது. அந்தப் படத்துக்கு இசை வெளியீடு என எந்தவொரு கொண்டாட்டமுமே இல்லை.
எனக்கொரு பிரச்சினை என்றவுடன் என்னை ஐசரி சார் அழைத்துப் பேசினார். அப்போது ஒரு காதல் கதையைச் சொல்லி, வருணை வைத்து பண்றேன் என்றேன். ஆனால், வருணை நேரில் சந்தித்தவுடன் அந்தக் காதல் கதையைத் தூக்கி எறிந்துவிட்டு, முழுமையான ஆக்ஷன் கதை ஒன்றை பண்ணியிருக்கேன். அதிலும் கொஞ்சம் காதல் இருக்கும்.
இந்தப் படத்தின் 50% படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னொரு வெளிநாட்டு படப்பிடிப்பு மட்டுமே பாக்கியுள்ளது. நிறைய ஆக்ஷன் காட்சிகளில் துணிச்சலாக வருண் நடித்துள்ளார். அந்த துணிச்சலாகவே இன்னும் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்று தோன்றியது. படமும் நன்றாக வந்துள்ளது. 2020-ம் ஆண்டு காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளது” என்று பேசினார் இயக்குநர் கெளதம் மேனன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT