Published : 23 Nov 2019 08:31 PM
Last Updated : 23 Nov 2019 08:31 PM

இளையராஜா - பிரசாத் லேப் இடையேயான பிரச்சினை: இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்

இளையராஜா - பிரசாத் லேப் இடையேயான பிரச்சினை குறித்து இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நீண்ட காலமாகவே இளையராஜாவின் இசைக்கூடம் சென்னையில் உள்ள பிரசாத் லேபில்தான் செயல்பட்டு வருகிறது. ஆனால், சமீபத்தில் இளையராஜா - பிரசாத் லேப் இரண்டு தரப்புக்கும் பிரச்சினை உண்டானது. இதனால் பெரும் மனக்கஷ்டத்துக்கு ஆளானார் இளையராஜா. தற்போது பிரசாத் லேபில் அவரது இசைக்கூடம் செயல்படவில்லை. இளையராஜாவும் அங்கு செல்வதை நிறுத்திவிட்டார்.

இந்தப் பிரச்சினையின்போது இளையராஜா - பிரசாத் லேப் நிறுவனம் ஆகிய இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், சுமுக முடிவு எட்டப்படவே இல்லை. தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சுமுகப் பேச்சுவார்த்தை மேற்கொள்ள ஒரு ஒரு யோசனையை இயக்குநர் பாரதிராஜா முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக இயக்குநர் பாரதிராஜா இன்று வெளியிட்ட அறிக்கையில், ''அரை நூற்றாண்டு கடந்து தமிழ் சினிமாவை இன்றும் தன் இசையால் உலகத் தமிழர்களின் நெஞ்சங்களைத் தொடர்ந்து தன்வசப்படுத்திக் கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்துக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்தில் இளையராஜாவின் திரைப்பட ஒலிப்பதிவு வேலைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இது மிகவும் வருத்தத்திற்குரிய நிகழ்வாகும். ஆகையால் மீண்டும் இசைப்பணிகளை அங்கு தொடர்ந்திட, பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்துடன் சுமுகமான பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் விதமாக அனைத்து படைப்பாளிகளும் தயாரிப்பாளர்களும் 28.11.2019 (வியாழக்கிழமை) அன்று பிற்பகல் 3 மணியளவில் சாலிகிராமம் பிரசாத் ஸ்டுடியோவில் ஒன்றுகூடுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x