Published : 21 Nov 2019 08:50 PM
Last Updated : 21 Nov 2019 08:50 PM

'ஆதித்ய வர்மா' இறுதிப் பிரதியை அப்பா பார்க்க விடாதது ஏன்?- துருவ் விக்ரம் பதில் 

'ஆதித்ய வர்மா' படத்தின் இறுதிப் பிரதியை அப்பா என்னைப் பார்க்க விடவில்லை என்று துருவ் விக்ரம் பேசினார்.

சந்தீப் வாங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'அர்ஜுன் ரெட்டி'. இதன் இந்தி ரீமேக்கும் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழ் ரீமேக்கில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்க 'ஆதித்ய வர்மா' என்ற பெயரில் உருவாகியுள்ளது.

'அர்ஜுன் ரெட்டி' படத்தில் முதல்நிலை உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கிரிசாய்யா இயக்கியுள்ளார். பனிடா சாந்து, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் துருவ் விக்ரமுடன் நடித்துள்ள இந்தப் படம் நாளை (நவம்பர் 22) வெளியாகவுள்ளது.

இந்நிலையில் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளின்போது துருவ் விக்ரம் பேசியதாவது:

''நான் முன்பே சொன்னது போல நான் என் அப்பாவின் மிகப்பெரிய ரசிகன். எதிர்காலத்தில் அவருக்காக ஒரு கதை எழுதி அவரை வைத்து ஒரு படம் இயக்குவேன். இதுவரை யாரும் பார்க்காத ஒரு இமேஜை நான் அவருக்குக் கொடுக்க விரும்புகிறேன். அதற்கு இன்னும் நிறைய காலம் உள்ளது என்று எனக்குப் புரிகிறது. ஏனெனில் இங்கே நான் கற்றுக்கொள்ள இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

'ஆதித்ய வர்மா' படத்தின் இறுதிப் பிரதியை அப்பா என்னைப் பார்க்க விடவில்லை. தியேட்டரில் ரசிகர்களின் எதிர்வினை எப்படி இருக்கிறது என்று நான் தெரிந்துகொள்ள அவர் விரும்புகிறார். அந்த அனுபவத்தை நான் தவறவிடுவதை அவர் விரும்பவில்லை என்று நான் நினைக்கிறேன். இது அவரது மகனை ஆச்சர்யப்படுத்த அவரது யோசனை''.

இவ்வாறு துருவ் விக்ரம் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x