Published : 19 Nov 2019 12:22 PM
Last Updated : 19 Nov 2019 12:22 PM

‘தர்பார்’ டப்பிங்கை முடித்த ரஜினி

‘தர்பார்’ படத்தின் டப்பிங்கை நேற்று (நவம்பர் 18) முடித்துக் கொடுத்துள்ளார் ரஜினி.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தர்பார்’. ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள இந்தப் படத்தில் நிவேதா தாமஸ், பிரதீக் பார்பர், சுனில் ஷெட்டி, யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துவரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் இசையமைக்கிறார். இதன் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ரஜினி தன்னுடைய காட்சிகளுக்கான டப்பிங்கை பேசி முடித்துவிட்டார். கடந்த 14-ம் தேதி டப்பிங்கைத் தொடங்கிய அவர், நேற்றுடன் (நவம்பர் 18) மொத்த டப்பிங்கையும் முடித்துக் கொடுத்துவிட்டார். எல்லா நடிகர்களின் டப்பிங்கும் முடிந்த பிறகு, பின்னணி இசை அமைப்பதற்கான வேலைகளைத் தொடங்கவுள்ளார் அனிருத்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை, வருகிற டிசம்பர் 7-ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தத் திட்டமிட்டு வருகின்றனர். படக்குழுவினர் மட்டுமின்றி, தென்னிந்திய மொழிகளில் ரஜினிக்கு நெருக்கமாக இருக்கும் பிரபல நடிகர்களும் இந்த விழாவுக்கு அழைக்கப்பட உள்ளனர்.

குறிப்பாக, நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனை அழைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற கமல் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகளில் ரஜினி கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x