Published : 15 Nov 2019 12:40 PM
Last Updated : 15 Nov 2019 12:40 PM

ஸ்ரீதேவி, ரேகாவுக்கு நாகேஸ்வரராவ் விருது: நாகார்ஜுனா அறிவிப்பு

மும்பை

பாலிவுட் நடிகைகள் ரேகா மற்றும் மறைந்த ஸ்ரீதேவி ஆகியோருக்கு நாகேஸ்வரராவ் விருது வழங்கப்படுவதாக தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா தெரிவித்துள்ளார்.

இதற்கான அறிவிப்பை நேற்று இரவு வெளியிட்ட நாகார்ஜுனா, மறைந்த நடிகை ஸ்ரீதேவி பாலிவுட்டின் ஐகானாகத் திகழ்ந்தவர் என்றும் நடிகை ரேகா என்றென்றும் இளமையாகவே நடித்து வருபவர் என்றும் கூறினார். இதற்கான விழா வரும் நவம்பர் 17-ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் நாகார்ஜுனா தனது தந்தையும் ஆந்திராவின் புகழ்பெற்ற நடிகரும் தயாரிப்பாளருமான மறைந்த அக்கினேனி நாகேஸ்வரராவ் பெயரில் தனது குடும்பத்தாருடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் திரைத்துறையில் நீண்ட பங்களிப்பு செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்து வருகின்றார். இந்த விருது 'ஏஎன்ஆர் விருது' என்று அழைக்கப்படுகிறது.

இதுகுறித்து நாகார்ஜுனா செய்தியாளர்களிடம் கூறுகையில், ''ஸ்ரீதேவி 2018 ஆம் ஆண்டில் சினிமாவுக்கு அளித்த பங்களிப்புக்காக கவுரவிக்கப்படுவார். 2019 ஆம் ஆண்டில் சினிமாவில் சிறந்து விளங்கியதற்காக ரேகாவுக்குப் பாராட்டு தெரிவிக்கப்படும்'' என்றார்.

நாகார்ஜுனா தயாரிப்பு நிறுவனமான அன்னபூர்ணா ஸ்டுடியோ தனது ட்விட்டர் பதிவில், ''2018 & 2019 ஆம் ஆண்டிற்கான ஏஎன்ஆர் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. மறைந்த ஸ்ரீதேவி பி கபூர் மற்றும் செல்வி ரேகா ஆகியோருக்கு நவம்பர் 17ஆம் தேதி நடைபெறும் விழாவில் விருது வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிரஞ்சீவி கலந்துகொள்வார். விழாவைத் தொடர்ந்து திரைப்படம் மற்றும் ஊடகத்திற்கான அன்னபூர்ணா கல்லூரியின் மூன்றாமாண்டு பட்டமளிப்பு விழா நடைபெறும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x