Published : 15 Nov 2019 12:07 PM
Last Updated : 15 Nov 2019 12:07 PM

பேச்சுவார்த்தையில் இழுபறி: ‘சங்கத்தமிழன்’ வெளியீட்டில் நீடிக்கும் சிக்கல்

விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சங்கத்தமிழன்’ பட வெளியீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளதால், எப்போது வெளியீடு என்பதில் சிக்கல் நீடிக்கிறது.

விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் ‘சங்கத்தமிழன்’. ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ள இந்தப் படத்தில் நாசர், சூரி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளனர்.

முதலில் தீபாவளி வெளியீடாக இருந்த இந்தப் படம், அதிலிருந்து பின்வாங்கி நவம்பர் 15-ம் தேதி வெளியீடு என அறிவிக்கப்பட்டது.

இந்தப் படத்தின் தமிழக விநியோக உரிமையைக் கைப்பற்றியுள்ள லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் சென்னை, கோவை, திருநெல்வேலி என தனித்தனியாக விநியோக உரிமைகளை விற்று, விளம்பரப்படுத்தும் பணிகளையும் துரிதப்படுத்தியது. ஆனால், இன்று இந்தப் படம் வெளியாகவில்லை.

‘வீரம்’ படத்தின்போது வரிச்சலுகை பிரச்சினை தொடர்பாக தயாரிப்பாளர் 7ஜி சிவா என்பவர் புகார் அளித்தார். இது தொடர்பான பேச்சுவார்த்தை தற்போது வரை நடந்து கொண்டிருக்கிறது. மேலும், சம்பளம் உள்ளிட்ட சில பிரச்சினைகளும் ஒன்றிணைந்து சுமார் 5 கோடி ரூபாய் வரை இருந்தால் மட்டுமே படம் வெளியாகும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்த பேச்சுவார்த்தை கடந்த 3 நாட்களாக நடந்தும், இன்னும் நல்ல முடிவு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. பிரச்சினைகளுக்குத் தீர்வு எட்டப்பட்டு, நாளை (சனிக்கிழமை) படத்தை வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x