Published : 13 Nov 2019 01:09 PM
Last Updated : 13 Nov 2019 01:09 PM
’மிக மிக அவசரம்’ படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி மீண்டும் திரையரங்க உரிமையாளர்களைச் சாடியுள்ளார்.
சுரேஷ் காமாட்சி தயாரித்து, இயக்கி உருவாக்கியுள்ள படம் 'மிக மிக அவசரம்'. ஸ்ரீ பிரியங்கா, அரீஷ் குமார், சீமான், முத்துராமன், ஈ.ராம்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை லிப்ரா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அக்டோபர் 11-ம் தேதி வெளியாகவிருந்த இந்தப் படத்துக்கு போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை. இதனால் சர்ச்சை உண்டானது.
இதனைத் தொடர்ந்து திரையரங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று, தற்போது 125-க்கும் அதிகமான திரையரங்குகளில் நவம்பர் 9-ம் தேதி 'மிக மிக அவசரம்' வெளியாகியுள்ளது. இதற்காக நன்றி தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், திரையரங்க உரிமையாளர்களை மிகவும் பாராட்டியது 'மிக மிக அவசரம்' படக்குழு.
மேலும், படமும் வெளியாகிப் பார்த்தவர்கள் படக்குழுவினருக்குப் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே திரையரங்குகள் கிடைத்தாலும் காட்சிகள் அனைத்துமே காலை 11:30 மணி, மதியம் 2:00 மணி காட்சிகளாக இருந்ததால், படக்குழு அதிர்ச்சியடைந்தது.
இது தொடர்பாக 'மிக மிக அவசரம்' படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பதிவில், "கொடுக்கிற மாதிரி கொடுப்பாங்களே அப்படித் தான் ஆகிப் போச்சு. திரையரங்குகள் ’மிக மிக அவசரம்’ படத்திற்குக் கிடைத்தது. காலைல ஷோ, மதியான ஷோவா கொடுத்தா யார் சார் தியேட்டருக்கு வருவாங்க? நான் விஜய் சார், அஜீத் சார் படமா பண்ணியிருக்கேன்? சின்ன படங்களை சாவடிக்கிறாங்க..” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT