Published : 12 Nov 2019 04:05 PM
Last Updated : 12 Nov 2019 04:05 PM

தமிழில் ரீமேக் ஆகிறது ‘ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாஸ ஆத்ரேயா’: சந்தானத்துடன் பேச்சுவார்த்தை

'ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாஸ ஆத்ரேயா' திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது. நாயகனாக நடிக்க சந்தானத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

ஸ்வரூப் ஆர்.எஸ்.ஜே இயக்கத்தில் நவீன், ஸ்ருதி ஷர்மா, ஸ்ரீதா ராஜகோபாலன், ராம்தத், விஸ்வநாத் உள்ளிட்ட பல புதுமுகங்கள் நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் 'ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாஸ ஆத்ரேயா'. ஜூன் 21-ம் தேதி வெளியான இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. பல்வேறு முன்னணி திரையுலகப் பிரபலங்கள் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டினார்கள்.

பலரும் பாராட்டவே, இந்தப் படத்தின் 2-ம் பாகம் உருவாக்கத்தில் இறங்கியுள்ளது படக்குழு. இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பால், இதன் ரீமேக் பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வந்தது. தமிழ் ரீமேக்கில் நடிக்க பல்வேறு நாயகர்களிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

இறுதியாக, தமிழ் ரீமேக்கில் சந்தானம் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. எப்போது தேதிகள், எவ்வளவு நாட்கள் படப்பிடிப்பு போன்ற இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது படக்குழு. இந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும் பட்சத்தில், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் இதர படக்குழுவினரை இறுதி செய்யவுள்ளது படக்குழு.

'ஏ 1' படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, 'டகால்டி', 'ஓடி ஓடி உழைக்கணும்', 'டிக்கிலோனா' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சந்தானம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x