Published : 12 Nov 2019 11:57 AM
Last Updated : 12 Nov 2019 11:57 AM
'சூப்பர் சிங்கர்' சீசன் 7 போட்டியின் வெற்றியாளர் தேர்வு குறித்து விஜய் டிவியை விமர்சித்துள்ளார் ஸ்ரீப்ரியா.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘சூப்பர் சிங்கர்’. இந்த நிகழ்ச்சியின் சீனியர் பிரிவின் 7-வது சீஸன் இறுதிப் போட்டி, கோவையில் உள்ள கொடீசியா அரங்கில் நவம்பர் 10-ம் தேதி நடைபெற்றது. விக்ரம், புண்யா, முருகன், சாம் விஷால் மற்றும் கெளதம் ஆகிய 5 பேரும் போட்டியாளர்களாகப் பங்கேற்றனர்.
இதில், மூக்குத்தி முருகன் முதல் பரிசைத் தட்டிச் சென்றார். அவருக்கு 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது. மேலும், நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் கூறியபடி அனிருத் இசையில் பாடும் வாய்ப்பும் வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசு விக்ரமுக்கும் மூன்றாம் பரிசு சாம் விஷால் மற்றும் புண்யா இருவருக்கும் சேர்த்து வழங்கப்பட்டது.
மூக்குத்தி முருகனுக்கு முதல் பரிசு வழங்கியதற்கு இணையத்தில் பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த சீசனில் விக்ரம் மற்றும் புண்யா இருவருமே சிறப்பாகப் பாடியதாகக் குறிப்பிட்டார்கள்.
இந்நிலையில் 'சூப்பர் சிங்கர்' சீசன் 7 முடிவுகள் குறித்து ஸ்ரீப்ரியா தனது ட்விட்டர் பதிவில், "விஜய் டிவி - சூப்பர் சிங்கர் பட்டம் எப்போதுமே பாடுவதில் திறமையானவருக்கு வழங்கப்படுவதில்லை என நம்புகிறேன்.
அந்த 5 போட்டியாளர்களில் புண்யாவும் விக்ரமும்தான் இசை ரீதியாக அற்புதத் திறமைகள். சத்யபிரகாஷ் வெற்றி பெறாத போதிலிருந்து போங்காட்டம் ஆரம்பமாகிவிட்டது. எப்போதாவது நியாயமா, சங்கீதத்தை மட்டும் கௌரவிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீப்ரியா.
#vijaytv I believe SS winner is never given to a contestant who is technically superior.Punya&Vikram are musically brilliant among the 5.bongu started from Satyaprakash not winning the tittle எப்பவாவது நியாயமா சங்கீத்த்தை மட்டும் கௌரவிக்பார்கள் என்ற நம்பிக்கையுடன் பார்கிறேன்....
— sripriya (@sripriya) November 10, 2019
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT