Published : 09 Nov 2019 03:27 PM
Last Updated : 09 Nov 2019 03:27 PM

'கோடீஸ்வரி' நிகழ்ச்சி: ராதிகாவுக்கு அமிதாப் பச்சன் வாழ்த்து

'கோடீஸ்வரி' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் ராதிகாவுக்கு, அமிதாப் பச்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கலர்ஸ் தமிழ் சேனலில் `கோடீஸ்வரி’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளார் ராதிகா சரத்குமார். வரும் டிசம்பர் முதல் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி, படித்த மற்றும் ஆளுமைமிக்க பெண்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், அவர்களின் அறிவுக்கேற்ற நிகழ்ச்சியாகவும் இருக்கும் என சேனல் தரப்பினர் கூறுகின்றனர்.

உலக அளவில் கவனம் ஈர்த்த `யார் மில்லியனராக விரும்புகிறார்?’ நிகழ்ச்சி மற்றும் இந்தியாவில் பிரபலமான `கோன் பனேகா குரோர்பதி’ போன்ற நிகழ்ச்சிகள் போல வடிவமைக்கப்பட்டு ‘கோடீஸ்வரி’ நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ள ராதிகாவுக்கு, அமிதாப் பச்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஏனென்றால், இந்தியில் 'கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியை அமிதாப் பச்சன்தான் தொடர்ச்சியாகத் தொகுத்து வழங்கி வருகிறார்.

ராதிகாவுக்கு வாழ்த்து தெரிவித்து அமிதாப் பச்சன் பேசியுள்ள வீடியோவில், "ராதிகாவுக்கு வணக்கம், அமிதாப் பச்சன் பேசுகிறேன். ‘கோடீஸ்வரி’ நிகழ்ச்சி மூலம் உங்களோடு உரையாடுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. திரைப்படங்களில் ஒரு சக நடிகனாக உங்களுடன் பணியாற்றி இருக்கிறேன்.

நீங்கள் 'கோடீஸ்வரி' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போகிறீர்கள் என்பதையும் தாண்டி, உங்களை வாழ்த்த பல காரணங்கள் உள்ளன. `கோன் பனேகா குரோர்பதி’யின் வரலாற்றில், நீங்கள்தான் முதல் பெண் தொகுப்பாளராக இருக்கப் போகிறீர்கள். இது வெறும் இந்திய அளவில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் `கோன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியில் பெண்கள் மட்டுமே பங்கு பெறக்கூடிய இந்நிகழ்ச்சி, தனித்துவமானது மட்டுமல்ல, பாராட்டுதலுக்கும் உரியது.

இது நிச்சயமாகப் பெண்களுக்கு ஊக்கமளிக்கக் கூடியதாக இருக்கும். உங்களுக்கும், ‘கோடீஸ்வரி’யின் போட்டியாளர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள். ராதிகா, உங்கள் வாழ்க்கையில் இப்போது இருப்பதைப் போல எப்போதும் சிறந்து விளங்க என்னுடைய வாழ்த்துகள். மிக்க நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x