Published : 05 Nov 2019 04:08 PM
Last Updated : 05 Nov 2019 04:08 PM
தமிழில் நடித்து வந்த 'பெண்குயின்' படப்பிடிப்பு நிறைவடைந்ததை கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
'சர்கார்' படத்தைத் தொடர்ந்து தமிழில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகும் படத்தில் ஒப்பந்தமானார் கீர்த்தி சுரேஷ். புதுமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்க படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
கொடைக்கானலைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. 'பெண்குயின்' என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் கர்ப்பிணிப் பெண்ணாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். 'மெஹந்தி சர்க்கஸ்' நாயகன் மாதம்பட்டி ரங்கராஜ், லிங்கா உள்ளிட்ட பலர் கீர்த்தியுடன் நடித்துள்ளனர்.
முழுக்க த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துள்ளது. இது தொடர்பாக கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "'பெண்குயின்’ படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஸ்டோன்பென்ச் தயாரிப்பு நிறுவனத்துக்கு நன்றி. இதைச் சாத்தியப்படுத்திய படக்குழுவினருக்கும் நன்றி. நான் பணியாற்றிய மிகச்சிறந்த அணிகளில் ஒன்று.
இந்தப் பயணத்தை நீங்கள் அனைவரும் சேர்ந்து இனிமையானதாகவும், மறக்க முடியாததாகவும் மாற்றிவிட்டீர்கள். நாங்கள் எடுத்ததை உங்களுக்குத் திரையிட ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளராக கார்த்திக் பழனி, எடிட்டராக அனில் க்ரிஷ் ஆகியோர் தொழில்நுட்பக் கலைஞர்களாகப் பணிபுரிந்து வருகிறார்கள்..
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT