Published : 04 Nov 2019 02:22 PM
Last Updated : 04 Nov 2019 02:22 PM

40 நாட்கள் படப்பிடிப்பு; நாயகியாக அஷ்யா: 'துப்பறிவாளன் 2' தொடக்கம்

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் 'துப்பறிவாளன் 2' படப்பிடிப்பு இங்கிலாந்தில் தொடங்கப்பட்டுள்ளது.

மிஷ்கின் இயக்கத்தில், விஷால் நடிப்பில் வெளியான படம் ‘துப்பறிவாளன்’. 2017-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி இந்தப் படம் ரிலீஸானது. கணியன் பூங்குன்றன் என்ற துப்பறியும் நிபுணர் கதாபாத்திரத்தில் விஷால் நடித்தார். மெட்ராஸ் என்டர்பிரைசஸ் சார்பில் நந்தகோபால் மற்றும் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்த இந்தப் படத்துக்கு, அரோல் கொரேலி இசையமைத்தார். விமர்சன ரீதியாக மட்டுமின்றி, வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

எனவே, இதன் இரண்டாம் பாகம் உருவாகும் என்று கூறப்பட்ட நிலையில், கடந்த செப்டம்பர் 10-ம் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்கும் இந்தப் படத்தின் இசையமைப்பாளராக இளையராஜா பணியாற்றுகிறார்.

பிரசன்னா, ரகுமான், கெளதமி ஆகியோர் விஷாலுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். நாயகியாக புதுமுகம் அஷ்யா ஒப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு இன்று (நவம்பர் 4) முதல் இங்கிலாந்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா பணிபுரியவுள்ளார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு 40 நாட்கள் நடைபெறவுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ள 'சைக்கோ' படத்தை முடித்துக் கொடுத்துவிட்டார் மிஷ்கின். அதனைத் தொடர்ந்து 'துப்பறிவாளன் 2' படத்தைத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x