Published : 26 Oct 2019 03:16 PM
Last Updated : 26 Oct 2019 03:16 PM

திரௌபதியின் பார்வையில் மகாபாரதம்: தீபிகா படுகோன் புதிய முயற்சி

திரௌபதியின் பார்வையிலிருந்து மகாபாரதக் கதையைச் சொல்லும் திரைப்படத்தை தீபிகா படுகோன் தயாரித்து நடிக்கவுள்ளார். மது மண்டேனா இணைந்து தயாரிக்கவுள்ளார்.

ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்டு மீண்டெழுந்து வந்து சாதித்த லக்‌ஷ்மி அகர்வால் என்பவரின் உண்மைக் கதை ’சப்பாக்’ என்ற பெயரில் தயாராகிறது. இந்தப் படத்தில் லக்‌ஷ்மி கதாபாத்திரத்தில் நடித்ததோடு முதல் முறையாக தயாரிப்பாளராகவும் தீபிகா படுகோன் மாறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து மகாபாரதக் கதையைப் புதுவிதமாகச் சொல்லும் நோக்கில், பாண்டவர்களின் மனைவியான திரௌபதி கதாபாத்திரத்தின் பார்வையில் ஒரு திரைப்படத்தை தீபிகா தயாரிக்கவுள்ளார். 2021 தீபாவளிக்கு இந்தப் படம் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்னும் சில பாகங்கள் எடுக்கப்பட்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் குறித்துப் பேசிய தீபிகா, "திரௌபதி கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்குக் கிடைத்த கவுரவம். மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளேன். என் வாழ்க்கையில் மிகப்பெரிய கதாபாத்திரம் இது என்று உண்மையாக நம்புகிறேன்.

மகாபாரதம் இதிகாசக் கதையாகவும், கலாச்சாரத்தில் அது ஏற்படுத்தும் தாக்கத்துக்காகவும் அறியப்பட்டாலும், நிறைய வாழ்க்கைப் பாடங்களை மகாபாரதத்திலிருந்து கற்றுக்கொள்ளலாம். முக்கியமாக அதன் ஆண் கதாபாத்திரங்களிலிருந்து. இதை புதிய ஒரு பார்வையில் சொல்லும்போது அது சுவாரஸ்யமாக இருப்பதோடு மிகவும் விசேஷமானதாகவும் அமையும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x