Published : 22 Oct 2019 10:50 AM
Last Updated : 22 Oct 2019 10:50 AM

'அசுரன்' படத்தில் தனுஷின் நடிப்பு ஈடு இணையற்றது: இயக்குநர் கரண் ஜோஹர் புகழாரம்

'அசுரன்' படத்தில் தனுஷின் நடிப்பு ஈடு இணையற்றது என்று இந்தி திரையுலகின் முன்னணி இயக்குநர் கரண் ஜோஹர் புகழாரம் சூட்டியுள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் 'அசுரன்'. தாணு தயாரிப்பில் வெளியான இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தனுஷ் நடிப்பில் வெளியான படங்களுள் முதல் 100 கோடி ரூபாய் வியாபாரத்தைக் கடந்த படம் என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

வெற்றிமாறன் இயக்கம், தனுஷ் நடிப்பு உள்ளிட்டவற்றுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்தப் படத்தைப் பார்த்து ரஜினி, கமல் உள்ளிட்ட பல்வேறு தமிழ்த் திரையுலகினர் படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்கள். இவர்களைத் தொடர்ந்து தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவும், 'அசுரன்' பார்த்துவிட்டு தனது வாழ்த்தைத் தெரிவித்தார்.

தற்போது இந்தி திரையுலகின் முன்னணி இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹரும், 'அசுரன்' பார்த்துவிட்டுப் படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார். இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவில், "அசுரன் என்ன ஒரு திரைப்படம் !! உங்களைப் புரட்டிப்போடும். முழுவதும் கவர்ந்துவிட்டது.

வெற்றிமாறனின் கலை நுணுக்கம், கதை சொல்லும் விதத்தில் மிரண்டு விட்டேன். தனுஷ் அற்புதம் என்று சொல்வதையும் மிஞ்சி விட்டார். அட்டகாசமான நடிப்பு. அவரது புயலுக்கு முன்னே அமைதி பாணி நடிப்பு ஈடு இணையற்றது. தயவுசெய்து பாருங்கள். சினிமாவின் வெற்றி" என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் கரண் ஜோஹர்.

'அசுரன்' படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இதன் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x