Published : 27 Jul 2015 09:39 AM
Last Updated : 27 Jul 2015 09:39 AM

நல்லது செய்ய மிரட்டல் வந்தாலும் பின்வாங்க மாட்டேன்: கருப்புக் கொடி காட்டியவர்களுக்கு நடிகர் விஷால் பதில்

‘நல்லது செய்யும்போது எவ்வளவு மிரட்டல்கள் வந்தாலும், நான் பின்வாங்க மட்டேன். மாடுகளுக்காக குரல் கொடுப்பதற் காகவே நான் வந்துள்ளேன், அரசியல் கட்சி தொடங்குவதற்காக வரவில்லை’ என கோவையில் நடைபெற்ற மாட்டினம் காக்கும் நிகழ்ச்சியில் நடிகர் விஷால் பேசினார்.

கோவையில் உள்ள ‘கோய முத்தூர் கேட்டில் கேர் வெல்பேர் டிரஸ்ட்’ அமைப்பின் சார்பில் மாடுகளைக் காக்க மாணவர்கள் இணையும் நிகழ்ச்சி, ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.

இந்த அமைப்பின் தலைவர் நிஜாமுதீன் தலைமை வகித்தார்.

இதில் நடிகர் விஷால் பேசியதாவது: சட்டவிரோதமாக மாடுகளைக் கடத்தி விற்பதை எதிர்த்து மாணவ, மாணவிகள் கூடியிருப்பது வரவேற்கத்தக்கது. இந்த நிகழ்ச்சிக்கு நான் வரும்போது பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது. கேட்டபோது, நான் பங்கேற்பதை எதிர்த்து சிலர் கருப்புக்கொடி காட்டுவதாகச் சொன்னார்கள். இதேபோல செல்போனிலும் ஏராளமான மிரட்டல்கள் எனக்கு வந்துகொண்டே இருந்தன. ஆனால், நல்ல விஷயம் செய்யும்போது எவ்வளவு மிரட்டல்கள் வந்தாலும் நான் பின்வாங்க மாட்டேன்.

நான் ஏன் விலங்குகளை காக்கும் ஒரு நிகழ்ச்சிக்கு வரக் கூடாது? அரசியல் கட்சியை தொடங்க வரவில்லை. மாடு களுக்காக குரல் கொடுக்க வந்துள்ளேன். மாட்டிறைச்சி உண்பவர்களுக்கோ, மாடுகளை சட்டப்படி விற்பவர்களுக்கோ நான் எதிரானவன் அல்ல. அதை சட்டப்படி செய்யாதவர்களையே கண்டிக்கிறோம். நான் என்ன பேசப்போகிறேன் எனத் தெரியாமலே கருப்புக் கொடி காட்டுவது சரியல்ல. குரல் கொடுக்க முடியாத பிராணிகளுக்காக குரல் கொடுக்க வந்தவர்களை நான் வணங்குகிறேன் என்றார்.

பயிற்சி முகாமுக்கு திட்டம்

இந்திய விலங்குகள் நலவாரி யத்தின் உதவிச் செயலாளர் எஸ்.வினோத்குமார் பேசியதாவது: விலங்கு வதை தடுப்புச் சட்டத்தை முதன்முதலாக 1960-ல் இந்தியாதான் அறிமுகப் படுத்தியது. ஆனால், தற்போது நமது நாட்டில்தான் விலங்குகள் வதைப்படுத்தப்படுவதும் அதிகரித்துள்ளது. போலீஸாருடன் இணைந்து இதைக் கட்டுப்படுத்த வேண்டும். குறிப்பாக இளைய தலைமுறைக்கு இந்த விழிப்புணர்வு அவசியம்.

விலங்குகளை கொடுமைப்படுத் துவதைத் தடுக்க பல்வேறு சட்டங்கள் இருந்தாலும், அதன் தீவிரம் யாருக்கும் தெரிவதில்லை. சட்டம் ஒழுங்கை காப்பவர் களுக்கும்கூட அவை தெரிவதில் லை. எனவே, இதுதொடர்பான பயிற்சி முகாம் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மூலம் கடந்த பிப்ரவரியில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆகஸ்ட் முதல் விலங்கு வதையை தடுப்பது குறித்த பயிற்சிகளை போலீஸாருக்கு அளிக்க உள்ளோம். சட்டப்படி விலங் குகளை கொடுமைப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம். சட்ட மீறல்களை பொதுமக்களும் போலீஸாரும் இணைந்து தடுக்க வேண்டும் என்றார்.

புளூ கிராஸ் அமைப்பின் பொது மேலாளர் டான் வில்லியம்ஸ், டெல்லியில் உள்ள கெள கியான் பவுண்டேஷன் அமைப்பைச் சேர்ந்த ஜோசின் ஆண்டனி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். கேட்டில் கேர் அமைப்பினர், கல்லூரி மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, மாடுகள் விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையிலும், மாட்டிறைச்சிக்கு எதிராகவும் இந்த நிகழ்ச்சி நடைபெறுவதாகக் கூறி சமூக நீதி இயக்கம் மற்றும் தலித் விடுதலைக் கட்சி அமைப்பினர் நடிகர் விஷாலுக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 57 பேரை போலீஸார் கைது செய்தனர். பலத்த பாதுகாப்பு ஏற்பாட்டுடன் நடிகர் விஷாலை நிகழ்ச்சிக்கு போலீஸார் அழைத்து வந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x