Published : 18 Oct 2019 08:21 PM
Last Updated : 18 Oct 2019 08:21 PM

கார்த்தியுடன் நட்பு, லோகேஷின் வித்தியாசம், படக்குழுவின் உழைப்பு: 'கைதி' அனுபவம் பகிரும் நரேன்

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'கைதி' படத்தின் படப்பிடிப்பு அனுபவங்களை நடிகர் நரேன் பகிர்ந்துள்ளார்.

விஜய் நடிப்பில் வெளியாகும் 'பிகில்' படத்துடன் மோதவுள்ளது கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'கைதி'. எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இந்தப் படத்தில் நரேன், ஜார்ஜ் மரியான், ரமணா, தீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'மாநகரம்' படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். சாம் சி.எஸ். இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நாயகி கிடையாது, பாடல்கள் கிடையாது, ஒரே இரவில் நடக்கும் கதை என்ற பல்வேறு சுவாரஸ்யம் நிறைந்த 'கைதி' கதையில் நடித்த அனுபவம் குறித்து நரேன் கூறியிருப்பதாவது:

''கார்த்தியும் நானும் நெருங்கிய நண்பர்கள், இந்தப் படத்தின் கேரக்டருக்கு என் பெயரைச் சொன்னவுடனே, கார்த்தி நானே போன் பண்றேன் அப்படின்னு அழைச்சார். 'அஞ்சாதே' படத்துக்குப் பிறகு பல போலீஸ் கேரக்டர் அது மாதிரியே இருந்தது. ஆகையால் அதிலெல்லாம் நடிக்கவில்லை. இந்தப் படத்திலும் போலீஸ் என்றவுடன், கேரக்டர் எப்படி எனக் கேட்டேன். நல்ல கேரக்டர் என்றவுடன் கார்த்தியிடம் 'நீங்க பண்றீங்களா' என்று கேட்டேன். அவர் நடிக்கிறார் என்றவுடன் நானும் நடிக்கிறேன் என்று ஒப்புக்கொண்டேன்.

ஏனென்றால், கார்த்தி அவ்வளவு எளிதில் ஒரு கதையை ஓ.கே. பண்ணமாட்டார். அவர் நடிக்கிறார். 'மாநகரம்' இயக்குநர் என்ற நம்பிக்கையில் சொன்னேன். இந்தப் படத்தின் கதையைக் கேட்ட பத்தாவது நிமிடத்தில் கண்டிப்பாக சூப்பராக இருக்கும் என்ற நம்பிக்கை வந்தது. கதையே பரபரப்பாவே இருக்கும். ஒரு பிரச்சினையில் மாட்டிக்கொள்ளும் நல்ல போலீஸ் எப்படியிருப்பானோ அப்படி நடித்துள்ளேன். அவனுக்குக் கையில் அடிபட்டிருக்கும். அந்தக் கையை வைத்துக்கொண்டு அவன் என்ன பண்றான் என்பதைப் படத்தில் பார்த்துக் கொள்ளுங்கள்.

படம் முழுக்கவே இரவு தான் ஷூட்டிங். செங்கல்பட்டு, கேரளா பார்டர் உள்ளிட்ட பல இடங்களில் ஷூட் பண்ணியிருக்கோம். இந்தப் படத்தில் குளிர்தான் புதிதாக இருந்தது. நடிகர்களை விடத் தொழில்நுட்பக் குழு தான் ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். எல்லா படங்களிலும் ஷூட்டிங்குக்கு இடையிலே ஒரு சின்ன கேப்ல கலகலப்பா பேசிட்டு இருப்போம். ஆனால், இது ரொம்ப ராவான கதை என்பதால், ஷூட்டிங் ஸ்பாட்டே பரபரப்பாகவே இருக்கும்.

50 நாட்கள் வரை தினமும் இரவு தான் ஷூட்டிங் என்றால் எப்படியிருக்கும் எனப் பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு நாள் தூங்கவில்லை என்றாலும் நமக்குச் சோர்வாக இருக்கும். ஆனால், படத்தில் என் கேரக்டர் சோர்வாகவே இருக்கும். அதை அப்படியே பண்ணிட்டேன்.

சினிமாவை ரொம்பவே காதலிக்கிற ஒரு குழுவோடு பணிபுரிந்ததில் சந்தோஷம். அவ்வளவு காதலோடு இந்தப் படத்தில் எல்லாருமே பணிபுரிந்துள்ளனர். ஒரு பெரிய கமர்ஷியல் படத்தில் நாயகியே இல்லாத படம் இதுதான் என நினைக்கிறேன். இதில் நடிக்க கார்த்திக்கு நிறைய தைரியம் வேண்டும்.

சினிமாவை மட்டுமே வாழ்க்கையாக நேசிக்கிற ஒரு ஆள் லோகேஷ் கனகராஜ். அதைத் தாண்டி வேறு எதுவும் பேசவே மாட்டார். எப்போதுமே வேலை வேலை வேலை தான். நான் ஒரு கமல் ரசிகர். அவர் என்னை விட பெரிய கமல் ரசிகர். நிறைய ஹாலிவுட் படம் பார்ப்பார், அதைப் பற்றி எல்லாம் பேசுவோம். பலர் இங்கே ஹாலிவுட் படம் மாதிரி பண்ண ஆசைப்பட்டுப் பண்ணி, அது பெரிதாக வெற்றி பெறாது. ஆனால், இங்கு அந்த மாதிரி படத்தை ஓடவைக்க என்ன விஷயங்கள் சேர்க்க வேண்டும் என்று தெரிந்த கில்லாடி லோகேஷ் கனகராஜ். அவர் இன்னும் பெரிய இடத்துக்குப் போவார்''.

இவ்வாறு நரேன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x