Published : 18 Oct 2019 12:08 PM
Last Updated : 18 Oct 2019 12:08 PM

சிரஞ்சீவிக்கு நாயகியாக த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை

கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு.

சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி, சுதீப், அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா, அனுஷ்கா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சைரா நரசிம்மா ரெட்டி'. தெலுங்கில் இப்படம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றாலும் இதர மொழிகளில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

இந்தப் படத்தைத் தொடர்ந்து மீண்டும் மகன் ராம் சரண் தயாரிக்கும் அடுத்த படத்திலும் நடிக்க ஒப்பந்தமானார் சிரஞ்சீவி. இதனை கொரட்டலா சிவா இயக்கவுள்ளார். சில நாட்களுக்கு முன்பு தான் இந்தப் படத்துக்கான பூஜை நடைபெற்றது. இதில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதில் நாயகியாக நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் அதிகாரபூர்வமாக ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால், அறிவிக்காமல் உள்ளது படக்குழு.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்த 'ஸ்டாலின்' படத்தில் நாயகியாக நடித்தவர் த்ரிஷா என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் மணிரத்னம் இயக்கவுள்ள 'பொன்னியின் செல்வன்' மற்றும் மலையாளத்தில் ‘மோகன்லால் - ஜீத்து ஜோசப்’ இணையும் படம் ஆகியவற்றிலும் த்ரிஷா நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

சிரஞ்சீவி - கொரட்டலா சிவா படத்தின் ஒளிப்பதிவாளராக திருவும், கலை இயக்குநராக சுரேஷ் செல்வராஜும் பணிபுரியவுள்ளனர். தற்போது படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்கள் தேர்வில் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x