Published : 16 Oct 2019 11:49 AM
Last Updated : 16 Oct 2019 11:49 AM

தணிக்கையில் 'யு/ஏ' சான்றிதழ்: அக்.25-ம் தேதி வெளியாகிறது 'பிகில்'?

தணிக்கையில் 'யு/ஏ' சான்றிதழ் பெற்றதைத் தொடர்ந்து, அக்டோபர் 25-ம் தேதி 'பிகில்' படம் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா, இந்துஜா, யோகி பாபு, விவேக், கதிர், வர்ஷா பொல்லாமா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பிகில்'. தீபாவளிக்கு வெளியாகவுள்ள இந்தப் படத்தின் தணிக்கைப் பணிகளும் முடிவடைந்தன. ஆனால், தணிக்கை விவரங்களைப் படக்குழு வெளியிடாமல் இருந்தது.

தற்போது, 'பிகில்' படத்தின் தணிக்கைச் சான்றிதழ் வெளியாகியுள்ளது. 'யு/ஏ' சான்றிதழ் பெற்றிருக்கும் இந்தப் படம் 178 நிமிடங்கள் 59 விநாடிகள் நேரம் கொண்டது என சான்றிதழ் மூலம் தெரியவந்துள்ளது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் படம் என்றால், முதல் நாள் அதிகக் காட்சிகள் திரையிட முடியாத சூழல் ஏற்படும். ஏனென்றால், இடைவேளை நேரம் கொடுத்து படம் முடியவே மூன்றரை மணி நேரத்துக்கு மேல் ஆகும். இதனால் வசூல் ரீதியில் சிறு பாதிப்பு ஏற்படலாம் எனத் தெரிகிறது.

அதேபோல் தணிக்கை விவரங்கள் வெளியாகிவிட்டாலும், படம் எப்போது வெளியீடு என்று படக்குழு அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை. அக்டோபர் 25-ம் தேதி வெளிக் கொண்டுவர முடிவு செய்துள்ளதாகக் கூறுகிறார்கள். ஏனென்றால், வெளிநாடுகளில் இந்திய நேரப்படி அக்டோபர் 24-ம் தேதி இரவுக்கு ப்ரீமியர் காட்சிகள் நடைபெறும். இதை வைத்துப் பார்த்தால் அக்டோபர் 25-ம் தேதி இந்தியாவில் படம் வெளிவருவது உறுதியாகிறது.

'பிகில்' படத்தில் சில காட்சிகளுக்கு இன்னும் கிராபிக்ஸ் பணிகள் முழுமையாக முடியவில்லை. இதன் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் அனைத்தும் முடிக்கப்பட்டு முதல் பிரதியை எடுக்க, படக்குழு தீவிரமாகப் பணிபுரிந்து வருகிறது. இதில் கவனம் செலுத்தி வருவதால்தான், இன்னும் இயக்குநர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்டோர் யாருமே படம் தொடர்பாக இன்னும் பேட்டியளிக்காமல் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x