Published : 14 Oct 2019 08:36 PM
Last Updated : 14 Oct 2019 08:36 PM

'வீ ஆர் தி பாய்ஸ்' நிகழ்ச்சியால் சர்ச்சை: கஸ்தூரி - மீரா மிதுன் காட்டம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'வீ ஆர் தி பாய்ஸ்' நிகழ்ச்சியால் மீண்டும் சர்ச்சை உருவெடுத்துள்ளது. கஸ்தூரி மற்றும் மீரா மிதுன் காட்டமாகப் பதிலடிக் கொடுத்துள்ளனர்.

'பிக் பாஸ் சீசன் 3' நிகழ்ச்சி முடிவடைந்து விட்டாலும், சர்ச்சைகள் தொடர்கதையாகி வருகிறது. இந்த சீசனில் முகின் ராவ், சாண்டி, தர்ஷன், கவின், இயக்குநர் சேரன், சரவணன் மற்றும் மோகன் வைத்தியா ஆகிய ஆண்கள் இடம்பெற்றார்கள். இவர்களுள் வெற்றியாளரான முகின் ராவ், சாண்டி, தர்ஷன் மற்றும் கவின் ஆகியோர் நெருங்கிய நண்பர்களாக வலம் வருகிறார்கள்.

இவர்களை வைத்து விஜய் தொலைக்காட்சி 'வீ ஆர் தி பாய்ஸ்' என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றைத் தயாரித்துச் செய்து, நேற்று (அக்டோபர் 13) ஒளிபரப்பியது. இதில் அவர்களது பிக் பாஸ் அனுபவங்களுடன், மற்றவர்களைக் கலாய்த்தது என அனைத்தும் இடம்பெற்றிருந்தது. இதில் பெண் போட்டியாளர்கள் கோபப்பட்டால் எப்படி நடந்து கொள்வார்கள் உள்ளிட்டவையும் இடம் பெற்றது.

இந்நிகழ்ச்சி பிக் பாஸ் போட்டியில் பங்கெடுத்த கஸ்தூரி மற்றும் மீரா மிதுன் இருவரையும் கடும் கோபத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இது தொடர்பாக கஸ்தூரி, "தங்களுக்குப் பிடித்தமானவர்களைப் பிரபலப்படுத்த விஜய் டிவி மோசமான போலி ஆண்மைத்தனத்தை விளம்பரப்படுத்துகிறது. நான் ஆம்பள நான் ஆம்பள என்று தனக்குத்தானே ஊளையிடுவதை இவ்வளவு தட்டிகுடுக்க வேண்டாமே? நல்ல அளவுகோல்களை நிர்ணயிக்க எங்கள் இளைய சமுதாயத்துக்கு நீங்கள் கடமைப்பட்டுள்ளீர்கள்" என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் கஸ்தூரி

மேலும், 'வீ ஆர் தி பாய்ஸ்' நிகழ்ச்சி குறித்து மீரா மிதுன் தனது ட்விட்டர் பக்கத்தில் 3 வீடியோக்கள் வெளியிட்டுள்ளார். அதில் "ஏன் 'வீ ஆர் தி பாஸ்' என்ற நிகழ்ச்சியை பண்ணினார்கள் எனத் தெரியவில்லை. ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே பிக் பாஸ் வீட்டிலிருந்தோம். ஆண்களை வைத்துத் தான் இந்த ஷோவே நடந்தது போல் காட்டியுள்ளனர். நான் அந்த நிகழ்ச்சியைப் பார்க்கவில்லை. ஆனால், ட்விட்டர் பக்கத்தில் அந்நிகழ்ச்சியில் என்னைக் கிண்டல் செய்ததாகக் கூறினார்கள்.

தமிழ்நாட்டில் சிலர் என்னை இழிவாகப் பேசித் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் இந்த 4 ஆண்களும் இணைந்திருப்பது எனக்குப் பெரிய விஷயமாகத் தெரியவில்லை. அந்த நால்வருமே என் பின்னால் தான் வீட்டிற்குள் சுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் யாருக்குமே தில், தைரியம் கிடையாது. வீட்டிற்குள்ளேயே என்னை அப்படிப் பார்ப்பார்கள். அவர்கள் கோழைகள். என்னிடம் பேசுவதற்குக் கூட மற்ற பெண்களுக்குத் தெரியாமல் பயந்து பயந்து பேசுவார்கள்.

உங்கள் யாருக்குமே என்னைப் பற்றிப் பேசவில்லை என்றால் புகழே கிடையாது. நான் தான் மிகவும் புகழ் வாய்ந்தவள். அந்த 4 ஆண்களுக்குமே எனது புகழைப் பற்றித் தெரியும். ஆகையால் தான் நால்வரும் எனக்காக அடித்துக் கொண்டார்கள்" என்று தெரிவித்துள்ளார் மீரா மிதுன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x