Published : 03 Oct 2019 03:17 PM
Last Updated : 03 Oct 2019 03:17 PM

கைக்குழந்தையுடன் 6300 அடி உயர மலையேறிய அனுபவம்: வைரலாகும் சமீரா ரெட்டியின் பதிவு

கைக்குழந்தையுடன் 6300 அடி உயர மலையேறிய அனுபவம் குறித்து சமீரா ரெட்டி வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

தமிழில் சூர்யா, விஷால், மாதவன் என பல முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்த நடிகை சமீரா ரெட்டி. 2014-ம் ஆண்டு அக்‌ஷய் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் 2015-ம் ஆண்டு ஒரு மகனும், சில மாதங்களுக்கு முன்பு ஒரு மகளும் பிறந்தனர்.

2-வது முறையாக கர்ப்பமாக இருக்கும் போது, அவ்வப்போது தன்னுடைய உடல்நிலை குறித்த பதிவுகளை சமீரா வெளியிட்டு வந்தார். மேலும், கர்ப்பமாக இருக்கும் போது தண்ணீருக்கு அடியில் வைத்து எடுக்கப்பட்ட இவரது போட்டோ ஷூட் சமூக வலைதளத்தில் பெரும் வைரலானது. கடந்த ஜூலை 12-ம் தேதி பிறந்த மகளுக்கு 'நைரா' எனப் பெயரிட்டுள்ளார்.

இரண்டு மாதங்களே ஆன தன்னுடைய மகளை வைத்துக்கொண்டு மலை ஏறிய அனுபவத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவாக வெளியிட்டுள்ளார் சமீரா ரெட்டி. இந்தப் பதிவு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பல திரையுலகப் பிரபலங்களும் இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கைக்குழந்தையுடன் 6,300 அடி மலையேறிய அனுபவம் குறித்து சமீரா ரெட்டி, "முல்லையாநகரி சிகரத்தில் ஏற முயற்சித்தேன். என் மகள் நைராவை என்னுடன் கட்டிக்கொண்டேன். நடுவில் மூச்சு முட்டியதால் நின்றேன். இந்த 6,300 அடி உயரச் சிகரம்தான் கர்நாடக மாநிலத்தில் உயரமான மலை. நான் செய்தது அவர்களும் பயணப்பட உந்தியுள்ளது என புதிதாகத் தாயான பலர் எனக்குச் செய்திகள் அனுப்பியிருக்கின்றனர்.

எனது பயணக் கதைகள் இப்படியான நேர்மறை எண்ணங்களை உருவாக்கியுள்ளது எனக்கு ஆர்வத்தைத் தருகிறது. குழந்தை பிறந்த பின் சோர்வாக உணர்வது சுலபம். அது என்னைத் துவளச்செய்யாமல் இருக்க வேண்டும் என்று நான் தீர்மானித்துள்ளேன். என் மகள் கேட்டபோதெல்லாம் நான் தாய்ப்பால் கொடுத்தேன். இப்படிப் பயணப்படுவது தான் எளிமையாகவும் தொல்லை குறைவாகவும் உள்ளது" என்று தெரிவித்துள்ளார் சமீரா ரெட்டி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x