Published : 02 Oct 2019 02:00 PM
Last Updated : 02 Oct 2019 02:00 PM

என்னுடைய தவறை ஒப்புக் கொள்கிறேன்: கவின் உருக்கமான பதிவு

பிக் பாஸ் போட்டியிலிருந்து வெளியேறிய கவின் முதன்முறையாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி 'பிக் பாஸ்' சீசன் 3. முந்தைய 2 ஆண்டுகளை விட, இந்த ஆண்டு கடும் சர்ச்சையில் சிக்கியது இந்த நிகழ்ச்சி. வனிதாவை விசாரிக்க காவல்துறை உள்ளே சென்றது, மீரா மிதுன் விசாரிப்பு, மதுமிதா கையை அறுத்துக் கொண்டது என பல்வேறு வகையில் சமூக வலைதளத்தில் கடும் எதிர்வினைகளைச் சந்தித்தது.

மேலும், இந்தப் போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளர் கவினும் சர்ச்சையில் சிக்கினார். ஆனால், சில வாரங்களுக்கு முன்பு பிக் பாஸ் போட்டியிலிருந்து வெளியேறினார். ''இந்த 5 லட்ச ரூபாய் எடுத்துக் கொண்டு யார் வெளியேறுகிறீர்கள்?'' என்ற கேள்வியை பிக் பாஸ் எழுப்பிய போது, நான் செல்கிறேன் என்று கவின் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் போட்டியிலிருந்து வெளியேறினாலும் கவின் எந்தவொரு பேட்டியுமே அளிக்கவில்லை. அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது, சீட்டுக் கம்பெனி நடத்திய வழக்கில் அவரது அம்மா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். தற்போது, தன் தாயாரை ஜாமீனில் வெளியே அழைத்து வந்துள்ளார். இந்நிலையில், பிக் பாஸ் போட்டியிலிருந்து வெளியேறிய கவின் முதன் முறையாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''எனக்கு இதை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. நிகழ்ச்சி முடிந்த பிறகோ அல்லது இப்போது எனக்கு இருக்கும் பிரச்சனைகளைத் தீர்த்துவிட்டொ இதைச் செய்யலாம் என்று நினைத்தேன். முதலில் நான் ஏன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன் என்பது நீங்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.

நான் மிகவும் பலவீனமாகவும், முயற்சி செய்த அனைத்திலும் தோல்வி அடைந்து கொண்டும் இருந்தேன். கடைசி இரண்டு ஆண்டுகளில் இழந்தவற்றை மீட்டெடுக்க இதை ஒரு வாய்ப்பாகப் பார்த்தேன். மிகவும் நேர்மறையான அணுகுமுறையுடனும், என்னால் முடிந்த அளவுக்கு எல்லாவற்றையும் பார்த்து விடவேண்டும் என்றுதான் உள்ளே சென்றேன். அதைத் தவிர நான் வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை. இதிலிருந்து கொஞ்சம் பணமும் சிறிய புகழையும் மட்டுமே எதிர்பார்த்தேன். என்னால் புரிந்துகொள்ள முடியாத அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயத்தைத்தான் நான் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

இந்தப் புகழை அனுபவிக்க வேண்டும் என்று ஆழ்மனதில் தோன்றினாலும் நான் எதிர்பார்க்காத பிரச்சினைகள் என்னை அவ்வாறு செய்ய விடாமல் தடுக்கிறது. எனவே நீங்கள் எனக்குக் கொடுத்த அன்புக்கு என்னால் உங்களுக்குச் சரியாக நன்றி கூட சொல்ல முடியவில்லை. இப்போது நீங்கள் எனக்குக் கொடுத்த அந்த அன்பை உங்களுக்குத் திருப்பி கொடுப்பதை விட என் குடும்பத்தைப் பார்த்துக் கொள்வதுதான் எனக்குத் தேவையாக இருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக, இது ஒரு ரியாலிட்டி ஷோ என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இது எல்லாமே எனக்குத் தெரிந்திருந்தாலும், அதை உணர எனக்குத் தாமதமாகி விட்டது. ஒரு கதாபாத்திரமாக சில விஷயங்களை ஆரம்பித்தேன். ஆனால் இதில் நிறைய உண்மையும், உணர்வுகளும் கலந்திருக்கிறது என்று புரிந்துகொண்டேன். அந்தக் கட்டத்திலிருந்து என்னுடைய உணர்வுகளுக்கு மிகவும் உண்மையாக இருந்து வருகிறேன், அவற்றை என்னைக் கட்டுப்படுத்தவும் அனுமதித்தேன்.

இதன் மூலம் நிகழ்ச்சியிலிருந்த சிலரை என்னுடைய நடவடிக்கைகள் பாதித்ததை நான் நியாயப்படுத்தவில்லை, ஆனால், என்னுடைய தவறை ஒப்புக் கொள்கிறேன். உங்களிடமிருந்து கிடைத்த இந்த அன்பை ஏற்றுக் கொள்கிறேன். அதே நேரத்தில் எனக்குக் கிடைத்த சில வெறுப்புகளுக்கும் நானே காரணம். என் மீது உள்ள வெறுப்புகளைக் குறைத்து ஒரு நல்ல வாழ்வை வாழ்வேன் என்பதை உறுதியாகக் கூறுகிறேன்.

இந்த நிகழ்ச்சிக்கு வந்த 17 பேருக்கும் வாழ்க்கை பாடத்தைக் கொடுத்திருக்கிறீர்கள். இது இங்கேயே முடிந்து விடாது. இந்த அன்புக்கு எப்போதும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். உங்களை ஏதாவது வழியில் காயப்படுத்தியிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். நான் எனதளவில் நேர்மையாக இருக்கிறேன். நீங்கள் அனைவரும் என்னைப் புரிந்து கொண்டு என்னை மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன்''.

இவ்வாறு கவின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x